ஶ்ரீபெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலை மீது பாம்புகள் எனப் பரவும் போலி வீடியோ!
பரவிய செய்தி
ஶ்ரீபெரம்பதூரில், நாகதேவதைகள் புடை சூழ நடராஜபெருமான் கண்டெடுக்கபட்டார். அவரை தொல்லியில் ஆய்விற்க்கு கொண்டு சென்றனர். தமிழகம் ஆன்மீக பூமி
மதிப்பீடு
விளக்கம்
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அதில் JCB இயந்திர உதவியுடன் நடராஜர் சிலை தோண்டி எடுக்கப்படுகிறது. அச்சிலையைச் சுற்றி பாம்புகள் உள்ளன.
உண்மை என்ன?
பரவக் கூடிய 25 வினாடி வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். இதன் முழு வீடியோ ‘KRB YT Vlog’ என்னும் யூடியூப் பக்கத்தில் கடந்த 28ம் தேதி பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
அந்த முழு வீடியோவில் நடராஜர் சிலையை ஒருவர் தொட்டதும் ஷாக் அடித்து விழுவது போல் காட்டப்படுகிறது. மேற்கொண்டு அந்த யூடியூப் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்பக்கம் முழுவதும் பேய், அமானுஷ்யம் எனப் பல சித்தரிப்பு வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண நேர்ந்தது. அப்படிதான் தற்போது பரவக் கூடிய வீடியோவும் சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏதேனும் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளதா எனத் தேடினோம். ஸ்ரீபெரும்புதூர் சிவன் கூடல் கிராமத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவ கொழுந்தீஸ்வரர் கோயிலில் தரை அமைப்பதற்காக JCB இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
அப்போது நிலத்திற்கடியில் பழமைவாய்ந்த நடராஜர் சிலை மற்றும் சூலம் போன்ற சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனைச் சென்னையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்திற்கு ஆய்வுக்காகக் கொண்டு சென்றுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் சிலையை சுற்றி பாம்புகள் எதுவும் இல்லை. மேலும் செய்தியில் காண்பிக்கப்படும் நடராஜர் சிலை உடைந்துள்ளது. ஆனால், பரவக் கூடிய வீடியோவில் உள்ள சிலை உடையாமல் முழுமையாக உள்ளது.
இவற்றில் இருந்து பரவக் கூடிய வீடியோவிற்கும் ஸ்ரீபெரும்புதூரில் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டதிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
ஸ்ரீபெரும்புதூரில் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டதிற்கும் பரவும் வீடியோவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டது.