ஸ்ரீரங்கம் கோயில் பணியாளரை தாக்கியது ஆந்திர பாஜகவினரே எனப் பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி

கோயிலில் கலவரம் செய்த பாஜகவினர்? திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் திருக்கோயில் பணியாளரை தாக்கியத்துடன், உண்டியலையும் சேதப்படுத்த முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அம்மாநில பாஜகவினர் என முதற்கட்ட தகவல்; அறநிலையத்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே, தூண்டுதலின் பேரில் திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டதாகவும் ஒப்புதல் வாக்குமூலம். – புதிய தலைமுறை

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆந்திர மாநிலத்திலிருந்து சாமி தரிசனம் செய்ய சென்ற 34 ஐயப்ப பக்தர்களுக்கும், அங்குள்ள கோயில் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பக்தர் ஒருவருக்கு முகத்தில் இரத்த காயம் ஏற்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அறநிலையத்துறை கூறுகையில், ஆந்திராவில் இருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த 34 ஐயப்ப பக்தர்கள் அங்கிருந்த மற்ற பக்தர்களுக்கு இடையூறு செய்யும் விதமாக நடந்து கொண்டதாகவும், சத்தமாக கோஷமிட்டதுடன் உண்டியலை தட்டி சத்தம் எழுப்பியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இந்த ஐயப்ப பக்தர்கள், பணியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஆந்திராவைச் சேர்ந்த சென்னா ராவ் என்பவரின் மூக்கு உடைந்து, அவருக்கும் இரத்த காயம் ஏற்பட்டது, கோயிலின் தற்காலிக பணியாளர்களான பரத், விக்னேஷ், செல்வகுமார் ஆகிய மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் “திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோயில் பணியாளரை தாக்கியத்துடன், உண்டியலையும் சேதப்படுத்த முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அம்மாநில பாஜகவினர் என முதற்கட்ட தகவல் ” என்று குறிப்பிடப்பட்ட புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

உண்மை என்ன ?

ஆந்திராவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள், பாஜகவைச் சேர்ந்தவர்கள் எனப் பரவும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு குறித்து அவர்களின் சமூக ஊடக பக்கங்களில் தேடியதில், இந்த நியூஸ் கார்டை அவர்கள் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.

பரவி வரும் நியூஸ் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு டிசம்பர் 12, பிற்பகல் 1 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள நியூஸ் கார்டு குறித்து தேடியதில், “ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன? – அறநிலையத்துறை விளக்கம்” என்ற தலைப்பில் அவர்கள் ஒரு நியூஸ் கார்டை வெளியிட்டிருந்ததையும், அது பரவி வரும் நியூஸ் கார்டைப் போன்றே உள்ளதையும் காண முடிந்தது.

அதில், “ஆந்திராவை சேர்ந்த 34 பக்தர்கள் உண்டியலை மிகுந்த ஓசையுடன் அடித்ததுடன் கோயில் பணியாளரையும் தாக்கியுள்ளனர்; திருக்கோயில் பணியாளரை தலைமுடியை பிடித்து உண்டியலில் மோத செய்துள்ளனர். மற்ற பக்தர்களை தரிசனம் செய்யவிடாமல் இடையூறு செய்ததால் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை – ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் “ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன? – அறநிலையத்துறை விளக்கம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த நியூஸ் கார்டை, “கோயிலில் கலவரம் செய்த பாஜகவினர்?” என்ற தலைப்புடன் போலியாக எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை உறுதிபடுத்த முடிந்தது.

முடிவு:

நம் தேடலில், ஸ்ரீரங்கம் கோயில் பணியாளரை தாக்கிய பக்தர்கள் ஆந்திரா பாஜகவினர் எனப் பரவும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader