எடப்பாடி பழனிச்சாமியை காப்பி அடித்தாரா மு.க ஸ்டாலின் ?| வைரல் புகைப்படம்.
பரவிய செய்தி
இத பார்றா போனவாரம் முதல்வர் நாற்று நட்டார்னு இந்தவாரம் கோமாளி கிளம்பிட்டான். பக்கத்துல அந்தக்காகூட நெஞ்சில பேட்ச் குத்திட்டே விவசாயம் பன்னுமாட்டிருக்கு. இதெல்லாம் இயற்கையா வரனும்டா. நீ எவ்வளவு நடிச்சாலும் நாடகம் எடுபடாதடியோய்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழக முதல்வர் பழனிச்சாமி கடந்த வாரம் நாகை மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். விழா முடிவடைந்த பிறகு காரில் சென்று கொண்டு இருந்த முதல்வர் திருவாரூரின் கொண்டையாறு பகுதியில் பெண்கள் வயலில் நாற்று நடுவதை பார்த்து தானும் வயலில் நாற்று நட்ட சம்பவம் செய்திகளில் வெளியாகியது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினும் எடப்பாடி பழனிச்சாமியை காப்பி அடித்து வயலில் இறங்கி நாற்று நட்டதாக புகைப்படமொன்று சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், அந்த பதிவுகளை வைத்து ட்ரோல் வீடியோகளும் பரப்பப்பட்டு வருகின்றன.
உண்மை என்ன ?
வைரலான பதிவுகளில் மு.க ஸ்டாலின் வயலில் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், வைரல் புகைப்படத்துடன் கடந்த 2015-ம் ஆண்டில் ” கரை வேஷ்டி கட்டி பழைய பன்னீர் செல்வமாக மாறிய ஸ்டாலின் ” என்ற தலைப்பில் வெளியான செய்தியும் கிடைத்தது.
2015-ல் ” நமக்கு நாமே ” பயணத்தின் போது மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு தொடர் பயணத்தை மேற்கொண்டார். அந்த பயணத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளை சந்தித்த ஸ்டாலின் டிராக்டரில் ஏறி வலம் வந்துள்ளார். பயணத்தில் பெரும்பாலும் கலர் சட்டை, பேண்ட் அணிந்து வலம் வந்த ஸ்டாலின் வெள்ளை சட்டை, வேஷ்டிக்கு மாறியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
2015-ல் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ” நமக்கு நாமே ” பயணத்தின் போது சென்ற மு.க.ஸ்டாலின் கட்சியினர் மற்றும் விவசாயிகள் உடன் விளைநிலத்தில் இறங்கிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்பொழுது பரப்பப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை தற்போது நிகழ்ந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி தவறான தகவலை பரப்பி கிண்டல் செய்வதும் அரசியலே.