முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் சென்று ஒரு முதலீட்டாளரை மட்டும் சந்தித்ததாகப் பரவும் தவறான தகவல்!

பரவிய செய்தி

தமிழக அரசு அதிகாரிகள் – 11 சிங்கப்பூர் தொழிலதிபர்கள் – 01

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் வருகின்ற 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. கடந்த மார்ச் 2022-ல் துபாய் சென்ற ஸ்டாலின், ரூ 6100 கோடிகள் முதலீட்டுடன் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்த நிலையில், லூலூ பன்னாட்டு குழுமம் தன்னுடைய முதலீட்டை தற்போது கோவையில் தொடங்கி விட்டது.

எனவே இதேபோன்று மற்ற நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் செல்லும் தன்னுடைய அரசு முறை பயணத்தை நேற்று (மே 23) தொடங்கினார்.

இந்நிலையில் தற்போது சிங்கப்பூருக்கு அரசு முறைப் பயணமாக சென்ற தமிழக அரசு அதிகாரிகள் 11 பேர், ஆனால் அங்கு அவர்கள் சந்தித்த தொழிலதிபர்கள் ஒருவர் மட்டுமே என்பது போன்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகின்றன.

Archive Link

உண்மை என்ன ?

பரவி வரும் பதிவுகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான CMOTamilNadu, முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் அரசு முறை பயணம் சென்றது குறித்து பல செய்திகளை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளதை காண முடிந்தது.

டமாசெக் (Temasek) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா உடனான சந்திப்பில், தமிழ்நாட்டில் காற்றாலை மின்சாரத் துறையில் டெமாசெக் நிறுவனம் மேற்கொண்டுள்ள முதலீட்டுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்ததாகவும், மாநிலத்தில் அதன் காலடித் தடத்தை விரிவுபடுத்துமாறும், தமிழ்நாட்டில் மேலும் புதிய கடல் சார்ந்த காற்றாலைகளை நிறுவுமாறும் கேட்டுக் கொண்டதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதன்மையாக செயல்படும் நிறுவனமான செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிம்யின் வாங்க் உடனான சந்திப்பின் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாட்டில் பல முன்முயற்சிகளைச் செயல்படுத்தவும், இங்குள்ள PPP மாதிரிகளை ஆராயுமாறும் கேட்டுக் கொண்டதாக இடம்பெற்றுள்ளது.

இதேபோன்று கேப்பிட்டா லேண்ட் (CapitaLand) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா உடனான சந்திப்பின்போது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (Research and Development) துறையில் தமிழ்நாட்டில் பங்களிப்பையும், முதலீடுகளையும் அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக செய்தியில் இடம்பெற்றுள்ளது.

இந்த செய்திகளின் மூலம் முதல்வர் இன்று டமாசெக் (Temasek), செம்ப்கார்ப் (Sembcorp), கேப்பிட்டா லேண்ட் (CapitaLand) ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசியுள்ளார் என்பதை அறிய முடிந்தது.

Twitter link 

மேலும் சிங்கப்பூரின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் அவர்களை சந்தித்து, இருநாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Twitter link

முடிவு:

நம் தேடலில், சிங்கப்பூருக்கு அரசு முறைப் பயணமாக சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு முதலீட்டாளரை மட்டுமே சந்தித்தாக பரவும் செய்திகள் தவறானது. முதல்வரின் சந்திப்பில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா உடனான புகைப்படத்தை மட்டும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni is working as a Sub-Editor in You Turn. She completed her Masters in History from Madras university. She holds her Bachelor’s degree in Engineering and holds a Bachelor’s degree in Tamil Literature. She is the former employee of IT Company. She currently finds the fake news in social media in order to verify the factual accuracy.
Back to top button