This article is from Feb 08, 2022

தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் ராமானுஜர் சிலை சீனாவில் செய்யப்பட்டதா ?

பரவிய செய்தி

ராமானுஜரின் பஞ்சலோக சிலை செய்ய 80% செம்பு பயன்படுத்த வேண்டும். அதை இந்தியாவிலேயே தயாரிக்க தூத்துக்குடி ஸ்டெரலைட் இயங்கி கொண்டிருக்க வேண்டும். ஏற்கெனவே இந்தியா செம்பு இறக்குமதி செய்து வருகிறது, வேறு வழியில்லை.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள முச்சிந்தலா கிராமத்தில் ” சமத்துவத்துக்கான ராமானுஜர் சிலை ” எனப் பெயரிடப்பட்டுள்ள 216 அடி உயரமுள்ள ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5-ம் தேதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ராமானுஜரின் இச்சிலை இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான சிலையாக அமைந்துள்ளது.

பிரதமர் மோடி ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது, ” ராமானுஜர் சிலை சீனாவில் உள்ள நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ” என ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பேசுப் பொருளானது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக ஆதரவாளர்கள், ” சிலைக்கு தேவையான செம்பு உற்பத்திக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்கி கொண்டிருக்க வேண்டும், எனவே வேறுவழியின்றி சீனா நிறுவனத்திடம் சென்றதாக ” பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ? 

ஸ்ரீவைஷ்ணவ பீடாதிபதி திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயரின் ஆசிரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் சிலையுடன் கூடிய 108 சிறிய கோயில்களும் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டதிற்கான முன்மொழிவுகள் 2014-ம் ஆண்டிலேயே தொடங்கி 2021-ம் ஆண்டு தான் முழு திட்டமும் நிறைவடைந்தது.

2015-ம் ஆண்டு சீனாவின் நின்ஜியாங்கில் உள்ள ஏரோசன் கார்ப்பரேஷன்(AEROSUN CORPORATION) என்ற நிறுவனத்திடம் பிரம்மாண்ட ராமானுஜர் சிலையை செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 2015-ல் சீன நிறுவனத்திடம் ஒப்பந்தம் முடிவாகியதாக statueofequality இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்நிறுவனம் உலகம் முழுவதும் பல பிரம்மாண்ட சிலைகளை உருவாக்கி உள்ளது.

ஆனால், 2018 மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே சீன நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இந்த சிலையை அமைக்க 7000 டன் அளவிலான தங்கம், வெள்ளி, பித்தளை, துத்தநாகம் மற்றும் தாமிரம் என பாரம்பரிய ஐந்து உலோகக் கலவைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

முடிவு : 

நம் தேடலில், ராமானுஜரின் பஞ்சலோக சிலை செய்ய தேவையான செம்பு தயாரிக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலை இயங்கிக் கொண்டிருக்க வேண்டும், அது இல்லாததால் சீனாவிற்கு சிலை திட்டம் சென்றதாக கூறுவது தவறான தகவல்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே சீன நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உலக அளவில் பிரம்மாண்ட சிலைகளை உருவாக்கி வருவதால் அந்நிறுவனத்திடம் திட்டம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader