சுப.வீரபாண்டியன் கலைஞரை தவறாக பேசியதாகப் பரவும் பொய் !
பரவிய செய்தி
களத்தில் சுபவீ… ஒரு வயசான திருட்டுப்பய.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
மதிப்பீடு
விளக்கம்
மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 அன்று தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் “திராவிட இயக்கத் தமிழர் பேரவை” இயக்கத்தின் பொதுசெயலாளராக உள்ள சுப.வீரபாண்டியன், கலைஞரையும், அவருடைய குடும்பத்தையும் கொச்சைப்படுத்தி பேசுவதைப் பாருங்கள் என்று கூறி 46 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை நடிகை கஸ்தூரி உட்பட நாம் தமிழர் கட்சியினர் பலரும் தங்கள் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
மேலும் பரவி வரும் வீடியோவில், “ஒரு திருட்டு பையன் இருக்கின்றான், வயதான திருட்டுப்பையன், காட்டுக்குள் வருபவர்களின் நகைகளையெல்லாம் பறித்துக் கொள்கிறான். கால் செருப்பையும் பறித்துக் கொள்வான். அவன் வயதாகி கடைசியில் இறந்து விட்டான். அதன்பின் தன் மகனை அழைத்து என்னை நல்லவனாக ஆக்கு என்று சொல்லிவிட்டு இறந்தான். மகன் வேட்டி சட்டையையும் கூட பறித்து கொண்டான். பின்பு அவனுக்கு மகன் கிளம்பியிருக்கிறான். அப்பன் வேறு யாருமில்லை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, மகன் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று அந்த வீடியோவில் சுப.வீரபாண்டியன் பேசுவதையும் காண முடிகிறது.
#ஒரு_வயசான_திருட்டுப்பய பற்றிய ஐயா சுபவீ pic.twitter.com/PsPdG3VDSH
— Dr. தீபக் ️ (@nikaran_tn) April 3, 2024
ஒரு வயசான திருட்டுப்பய – சுப.வீ. வெர்சன்! சீமானுக்கு பொங்குற கொத்தடிமை ஊப்பிஸ் இவர என்ன பண்ண போறானுங்களோ.. #ஒரு_வயசான_திருட்டுப்பய pic.twitter.com/5akcDGIVEF
— Saravanan Natarajan (@Saravanan_Nata) April 1, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதன் முழு வீடியோ “Dravidam 100” என்ற யூடியூப் பக்கத்தில் மார்ச் 31 அன்று பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
15:26 நிமிடங்கள் கொண்ட முழு வீடியோவில் பேசியுள்ள சுப.வீரபாண்டியன், “தவறை சுட்டிக்காட்டவோ அல்லது ஏதாவது தகவல் சொல்வதற்கோ அல்ல இந்த பதிவு, என் நெஞ்சில் உள்ள தாளாத வேதனையை காட்டுவதற்கே இந்த பதிவு. இவர்களுக்கெல்லாம் விடை சொல்ல வேண்டாம் என்று நண்பர்கள் தடுத்தார்கள். இருப்பினும் என்னுடைய உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று ராமநாதபுரம் தேர்தல் பரப்புரையில் பேசுகின்ற போது கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி தரக்குறைவாக பேசியிருக்கிறார். எப்போதும் பேச்சில் ஒரு நாகரிகம், ஒரு தரம் இருக்க வேண்டும்” என்று கூறி கொண்டே பரவி வரும் வீடியோவில் உள்ளவாறு சீமான் இவ்வாறு தரக்குறைவாக பேசியுள்ளார் என்று குறிப்பிட்டு சீமான் கூறிய வார்த்தைகளை 4:20 நிமிடத்தில் அப்படியே பேசி காட்டுகிறார்.
எனவே இது குறித்து சீமான் தரக்குறைவாக பேசியுள்ள வீடியோ குறித்து தேடியதில், NTK IT Wing எக்ஸ் பக்கத்தில் மார்ச் 30 அன்று “மகன் திருடனை விட அப்பா திருடனே மேல், அப்பா திருடன் – கருணாநிதி; மகன் திருடன் – ஸ்டாலின்; மூன்றாவதாக பேரன் திருடன் தயாராகி கொண்டிருக்கிறார்.- செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்” என்று குறிப்பிட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
” மகன் திருடனை விட அப்பா திருடனே மேல் “
அப்பா திருடன் – கருணாநிதி
மகன் திருடன் – ஸ்டாலின்மூன்றாவதாக பேரன் திருடன் தயாராகி கொண்டிருக்கிறார்.
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்@Seeman4TN#seeman | #NTK |#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி#NTK_Symbol_Mike#Elections2024 pic.twitter.com/m3ukAX1ob6— NTK IT Wing (@_ITWingNTK) March 30, 2024
இதன் மூலம் சீமான் கலைஞர் குறித்தும், தற்போதைய முதலமைச்சர் குறித்தும் தரக்குறைவாக பேசியுள்ளதாகக் கூறி சீமானின் பேச்சை சுட்டிக்காட்டி பேசியுள்ள சுப.வீரபாண்டியன் வீடியோவை, சுப.வீ தான் கொச்சைப்படுத்தி பேசுவதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: ஆதி திராவிடர் மேம்பாட்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதியில் இருந்து மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதாக சீமான் சொன்ன பொய்!
முடிவு:
நம் தேடலில், கலைஞர் கருணாநிதியையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் சுப.வீரபாண்டியன் கொச்சைப் படுத்தி பெசியாகக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.