பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த இந்துவும் ஞானமடைய முடியாது என சுகி சிவம் கூறினாரா ?
பரவிய செய்தி
பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது – சுகி.சிவம்
மதிப்பீடு
விளக்கம்
ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம் அவர்கள், ” பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது ” எனக் கூறியதாக பெரியார் மற்றும் சுகிசிவம் புகைப்படம் இடம்பெற்ற மீம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
சுகிசிவம் இப்படியொரு கருத்தைக் கூறினாரா எனத் தேடுகையில் Suki Sivam சுகிசிவம் – The Great Philosopher எனும் முகநூல் பக்கத்தில்,” என் படத்தையும் பெரியார் அவர்கள் படத்தையும் போட்டு நான் சொல்லாத வாசகத்தையும் போட்டு ஒரு Facebook இல் ஒரு செய்தி உலா வருகிறது. அது பொய்” என சுகி சிவம் விளக்கம் அளித்துள்ளதாக பதிவு வெளியாகி உள்ளது.
பெரியார் குறித்து சுகிசிவம் எங்கும் பேசியுள்ளாரா எனத் தேடிய போது 2018-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், ” என் வீட்டில் காஞ்சி பெரியவரின் தெய்வத்தின் குரல் புத்தங்கள் வரிசையாக இருப்பது போன்று பெரியாரின் சிந்தனை புத்தகங்களும் வரிசையாக இருக்கும். என்னைப் பொருத்தவரை, நான் வைத்திருக்கும் தராசில் சமமாக காஞ்சி பெரியவரும் இருக்கிறார், ஈரோட்டு பெரியாரும் இருக்கிறார். இதைப் புரிந்து கொள்ளாதவரையில் சமூகத்தில் மனிதன் ஞானம் அடைய முடியாது ” எனப் பேசி இருப்பார்.
இந்த வீடியோவில் சுகி சிவம் உடைய பேச்சில், ” பெரியாரை புரிந்து கொள்ளாதவர்கள் என்றோ அல்லது இந்துக்கள் என்றோ ” குறிப்பிட்டு ஞானம் அடைய முடியாது என பேசவில்லை.
முடிவு :
நம் தேடலில், பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த இந்துவும் ஞானமடைய முடியாது என சுகி சிவம் பேசியதாக பரவும் தகவல் பொய்யானது என அறிய முடிகிறது.