This article is from Aug 08, 2020

ஓடி, ஒளிய வேண்டிய அவசியம் எனக்கில்லை என எஸ்.வி.சேகர் கூறியதாக வதந்தி !

பரவிய செய்தி

முதல்வருக்கு எஸ்.வி சேகர் பதிலடி ! ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எனக்கில்லை. எங்கே வந்து பால் பாக்கெட் போட்டீர்களோ அங்கேயேதான் இருப்பேன்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கள் வீட்டிற்கு வந்த பால் கெட்டு போனதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட எஸ்.வி சேகருக்கு உடனடியாக 9 பால் பாக்கெட் கிடைக்கும்படி செய்தது தமிழக அரசு. இது பேசு பொருளானது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ” அதிமுக உருப்பட வேண்டுமென்றால், கட்சிக் கொடியில் இருந்து அண்ணா உருவப் படத்தை நீக்க வேண்டும், அதற்கு பதிலாக எம்ஜிஆர் படத்தை வைத்துக் கொள்ளலாம் ” என சர்ச்சையான கருத்தை எஸ்.வி சேகர் கூறி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக அமைச்சர் ஜெயகுமார், அதிமுக சார்பில் எம்எல்ஏ வாக இருந்த போது பெற்ற ஊதியத்தையும், தற்போது வாங்கும் ஓய்வூதியத்தையும் திருப்பித் தர எஸ்.வி சேகர் தயாராக எனக் கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இதையடுத்து, எஸ்.வி சேகர் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிச்சாமி, எஸ்.வி சேகரின் கருத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார் எஸ்.வி.சேகர் ” என பேசி இருந்தது வைரலாகியது.

Facebook link | archive link 

இந்நிலையில், ” ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எனக்கில்லை. எங்கே வந்து பால் பாக்கெட் போட்டீர்களோ அங்கேயேதான் இருப்பேன் ” என முதல்வர் பேச்சுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்து உள்ளதாக நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியான நியூஸ் 7 தமிழ் செய்திகளை அதன் முகநூல், ட்விட்டர் பக்கத்தில் ஆராய்கையில் இவ்வாறான எந்தவொரு செய்தியும், நியூஸ் கார்டும் வெளியாகவில்லை என தெரிந்து கொள்ள முடிந்தது. வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு ஃபோட்டோஷாப் செய்யப்பட்டவையாக இருக்கக்கூடும் எனத் தோன்றியது. ஏனெனில், மற்ற நியூஸ் கார்டில் செய்தி வாக்கியத்திற்கு பின்னால் நியூஸ் 7 தமிழ் லோகோ இருப்பதை போல் வைரலாகும் நியூஸ் கார்டில் இல்லை.

இது குறித்து எஸ்.வி.சேகர் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய போது, ” இதுபோன்ற கருத்தை நான் வெளியிடவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு என ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளேன் ” என தெரிவித்து உள்ளார்.

Twitter link | archive link 

எஸ்.வி.சேகர் முதல்வர் கருத்திற்கு பதிலடிக் கொடுத்ததாக பிற சேனல்களில் கூட செய்திகள் வெளியாகவில்லை. செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகளை உண்மை போல் ஃபோட்டோஷாப் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள். தமிழகத்தில் இதுபோன்ற செயல்கள் அதிகரித்து வருகிறது என்பதை நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.

Please complete the required fields.




Back to top button
loader