சிரிய போரை கொச்சைப்படுத்தும் முயற்சி, போலி என கிளம்பும் புரளி-பகுதி 1.

பரவிய செய்தி
சிரியாவில் நடைபெற்று வரும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒரே குழந்தையை 3 வெவ்வேறு மீட்புப் பணியினர் வெவ்வேறு இடங்களில் காப்பாற்றுவது போன்ற படங்களை பயன்படுத்தி CNN நிறுவனம் செய்தியை வெளியிட்டுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
சிரியா யுத்தத்தில் ஒரு குழந்தையை மூன்று வெவ்வேறு நபர்கள் மீட்பது போன்ற படங்களை CNN செய்தி நிறுவனம் வெளியிட்டதாக வதந்தியை பரப்பியுள்ளனர். இவை 2016-ல் சிரியாவின் அலேப்போ நகரில் மீட்கப்பட்ட குழந்தையின் படங்கள்.
விளக்கம்
கிழக்கு கௌட்டா நகரில் அரசு ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலால் நூற்றுக்கணக்கான குழந்தைகள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்தனர், லட்சக்கணக்கான மக்கள் காயங்களுடன் தவித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, கிழக்கு கௌட்டாவின் பதுங்கு குழிகள், இடுபாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றன. போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்கள் உலகளவில் அனைத்து ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனமான CNN, யுத்த நெருக்கடியில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டனர். அதில், ஒரே உடையில் உள்ள குழந்தையை 3 வெவ்வேறான மீட்பு படையினர் வெவ்வேறு இடங்களில் காப்பாற்றியது போன்ற 3 படங்களை வெளியிட்டு தவறான செய்தியை மக்களுக்கு தெரிவித்துள்ளது என்று சமூக வலைத்தளங்களில் அப்படங்கள் அதிகம் பகிரப்படுகிறது.
ஆனால், இவையும் தவறாக திரித்து பரப்பப்பட்ட செய்திகளே ! இவற்றில் இணைக்கப்பட்ட படங்களை வைத்து தேடுகையில், இப்படங்கள் 2016-ல் சிரியாவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு எடுக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் 27, 2016-ல் சிரியாவின் அலேப்போ நகரில் வீசப்பட்ட பேரல் குண்டுவீச்சால் 11 குழந்தைகள் உள்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். இப்பகுதியில் வீசப்பட்ட இரு குண்டுகளின் பெறும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணிகள் நடைபெற்றன.
CNN வெளியிட்டதாகப் பரவிய படங்களின் தொகுப்பில் நடுவில் உள்ள படம், ஆகஸ்ட் 27, 2016-ல் அலேப்போ நகரில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலுக்கு பிறகு மீட்கப்பட்ட குழந்தையை தூக்கிச் செல்லும் போது எடுக்கப்பட்டவை. உண்மையில் சித்தரிக்கப்பட்டவை எனக் கூறும், குழந்தையை தூக்கி செல்லும் மற்றொரு இடதுபுற படமும் தாக்குதலுக்கு பிறகே எடுக்கபட்டது.
மூன்று படங்களிலும் ஒரே உடையில் காணப்படும் அக்குழந்தை மீட்டுப் படையினரால் கட்டிடங்களில் இருந்து மீட்கப்பட்ட படம் தான் முதலில் இருப்பது. அதன் முழுமையான படத்தில் அக்குழந்தையுடன் பிற குழந்தைகளும் மீட்கப்படுவதை தெளிவாக காண முடிகிறது.
இந்த மூன்று படங்கள் தவிர, அக்குழந்தை மீட்கப்பட்ட பிறகு தனியாக வாகனத்தில் அமர்ந்திருக்கும் போது எடுக்கப்பட்ட படம் தான் இது.
ஆக, வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு இடங்களில் ஒரே குழந்தையின் மூன்று படங்களில் மூன்று வெவ்வேறு நபர்கள் மீட்பது போன்ற காட்சி இடம்பெற்றிப்பதாகக் கூறி பரவி வரும் படங்கள், அலேப்போ நகர் குண்டுவீச்சு பாதிப்பில் இருந்து ஒருவரால் மீட்கப்பட்ட குழந்தை பிறகு பாதுகாப்பாளர் அல்லது உறவினரிடம் சென்றுள்ளதை தனித்தனியாக புகைப்படம் எடுத்துள்ளனர் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.
மேலும், CNN செய்தி நிறுவனம் சித்தரிக்கப்பட்ட இப்படங்களை பயன்படுத்தி செய்தி வெளியிட்டது என்பதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. இரக்கமற்றவர்களால் நிகழ்த்தப்படும் தாக்குதலில் இருந்து மனிதாபிமானம் உள்ளவர்கள் மக்களை காப்பாற்றும் செயலிலும் கூட வதந்திகளை பரப்புவது வேதனையிலும் வேதனையே!!
சிரிய தாக்குதல் பற்றி தொடர்ந்து வலம் வரும் புரளிகளை பற்றி காண்போம்..