This article is from Nov 16, 2017

தாஜ்மஹால் ” தேஜோ மகாலயா” எனும் புராதான சிவன் ஆலயமா ?

பரவிய செய்தி

உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் மும்தாஜின் சமாதி இல்லை. அது புராதான சிவன் ஆலயம் .

மதிப்பீடு

விளக்கம்

ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும். ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் மீது கொண்ட அளவற்ற காதலால் தாஜ்மஹாலை நிறுவினர் எனக் கூறப்படுகிறது. ஆனால் தாஜ்மஹாலானது மும்தாஜின் கல்லறையல்ல, அது புராதான சிவன் ஆலயம் என்ற வழக்கு தொடரப்பட்டது. மேலும், சமூக வலைதளங்களிலும் கேள்விகள், வீடியோக்கள் பதிவாகின.

புகழ் பெற்ற தாஜ்மஹாலை சிவன் ஆலயமாக அறிவிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஹரிஷங்கர் தலைமையில் 6 வழக்கறிஞர்கள் ஆக்ரா நீதிமன்றத்தில் 2015 மனுதாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் 1212 ஆம் ஆண்டில் ராஜா பரமர்திதேவ் ‘தேஜோ மகாலயா’ என்ற சிவன் ஆலயம் ஒன்றை கட்டினார். அதன் பிறகு ஜெய்பூர் மன்னர் ராஜமான்சிங் இக்கோவிலை கைப்பற்றினார். அவருக்கு பிறகு ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார்.

1632 ஆம் ஆண்டில் ஷாஜகான் ‘தேஜோ மகாலயா’ கோவிலைக் கைப்பற்றினார். பின்னர் அக்கோவிலை இடித்து முகலாய கட்டிட முறையில் மாற்றம் செய்து மும்தாஜ் நினைவாக தாஜ்மஹாலை கட்டினார். எனவே தாஜ்மஹாலை சிவன் ஆலயமாக அறிவித்து அந்த இடத்தை சிவ பெருமானின் பெயரிலையே திரும்ப பெற்று தருமாறும், மேலும் அங்கு வழிபாடுகள் நடத்த அனுமதிக்குமாறும் கூறியிருந்தனர்.

உண்மை என்ன ?

இது தொடர்பாக விசாரணையை தொடங்குமாறு மத்திய அரசு, கலாசாரத் துறை மற்றும் தொல்பொருள் ஆய்வகத்திற்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன் பின்னர் கலாச்சாரத் துறை தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் கோவில்கள் ஏதும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியது.

மேலும் தொல்பொருள் ஆய்வக துறையானது, ‘தேஜோ மகாலயா’ என்ற சிவனாலயம் இருந்ததற்கான எவ்வித அடையாளங்களும் அங்கு இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்தது.

ஆனால் தொல்லியல் துறையின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஹரிஷங்கர் தரப்பில் கூறியதால் வழக்கைத் தள்ளி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் தாஜ்மஹால் சிவன் ஆலயம் இல்லை என்று நிரூபணமாகியுள்ளது.

கூடுதல் தகவல் :

மீண்டும் மீண்டும் தாஜ்மஹால் ஒரு சிவன் ஆலயம் என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது. 2021-ல் சமூக வலைதள பக்கங்களில், ” தாஜ்மஹால் இந்து ஆலயமாகவே இருந்தது என வரையப்பட்ட சிவன் ஆலயத்துடன் ஓர் தகவலும் பகிரப்பட்டு வருகிறது. பேராசிரியர் ஓக் என்பவர் ” தாஜ்மஹால் : தி ட்ரூ ஸ்டோரி ” இல் இதை குறிப்பிட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

பேராசிரியர் ஓக் குறித்து தேடுகையில், 2017-ல் Whose Taj Mahal is it anyway? எனும் தலைப்பில் பிபிசி வெளியிட்ட கட்டுரையில், 2007-ல் மறைந்த வலதுசாரி வரலாற்று ஆசிரியர் பி.என்.ஓக் 1989ம் ஆண்டு தனது  தாஜ்மஹால் : தி ட்ரூ ஸ்டோரி எனும் புத்தகத்தில் நினைவு சின்னத்தை தேஜோ மஹால் என அழைக்கிறார். இந்த நினைவுச் சின்னம் முதலில் ஓர் இந்து கோவில் ஆகவும், ராஜபுத்திர ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட அரண்மனை என்றும் புத்தகத்தில் வாதிட்டு உள்ளதாக ” குறிப்பிட்டு உள்ளது.

தாஜ்மஹால் இந்து கோவில் என 2000-ல் ஓக் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், 2005-ல் அலகாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது என 2017-ல் வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் சிவன் கோவில் இருந்ததற்கான எந்தவொரு அடையாளமும் இல்லை என்று இந்திய தொல்பொருள் ஆய்வு கழகம் 2017-ல் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader