This article is from Jul 26, 2021

தமிழ்நாடு அரசின் கோபுர சின்னத்தை மாற்ற குழு அமைக்கப்படும் என உதயநிதி கூறினாரா ?

பரவிய செய்தி

தமிழக அரசின் கோபுர சின்னம் குறிப்பிட்ட மதத்தை குறிப்பதால் சின்னத்தை மாற்ற குழு அமைக்கப்படும். குழு அமைத்து அறிக்கை தர உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தகவல் !

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாடு அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலின் கோபுரம் சின்னமாக இடம்பெற்று இருக்கிறது. அது குறிப்பிட்ட மதத்தைக் குறிப்பிடுவதால் அதை மாற்ற குழு அமைக்கப்படும் என திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியதாக ஓர் தகவலும், அது தொடர்பாக சன் நியூஸ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜூலை 21-ம் தேதி தமிழ்தேசம் எனும் இணையதளத்தில் வெளியான இதே தகவலின் ஸ்க்ரீன்ஷார்டை சேர்த்தே பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை என்ன ?

சன் நியூஸ் சேனலின் முகநூல் பக்கத்தில் வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தேடுகையில் அப்படி எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. ஜூலை 26-ம் தேதி வெளியான நியூஸ் கார்டு ஒன்றை உதயநிதி கூறியதாக எடிட் செய்து தவறாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

திமுகவின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், ” தமிழக அரசின் கோபுர சின்னம் குறிப்பிட்ட மதத்தை குறிப்பதால் சின்னத்தை மாற்ற குழு அமைக்கப்படும் ” என அறிக்கையோ, பதிவோ வெளியிட்டு இருந்தால் மிகப்பெரிய அளவில் சர்ச்சையையும், கண்டனத்தையும் ஏற்படுத்தி இருக்கும். செய்தி சேனல்களில் விவாதங்கள் தொடங்கி இருக்கும். ஆனால், தமிழ்நாடு அரசின் சின்னம் மாற்றுவது குறித்து உதயநிதி இப்படியொரு தகவலை வெளியிட்டதாக எந்த முன்னணி செய்திகளும் இல்லை.

இதுதொடர்பாக, திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டின் ரவீந்திரன் அவர்களை தொடர்பு  கொண்டு பேசிய போது, ” உதயநிதி எதற்காக அப்படி கூற போகிறார். இது தேவையில்லாத வேலை. அவர் அப்படி எதுவும் கூறவில்லை. இது வதந்தியே ” எனத் தெரிவித்து இருந்தார்.

முடிவு :

நம் தேடலில், தமிழக அரசின் கோபுர சின்னம் குறிப்பிட்ட மதத்தை குறிப்பதால் சின்னத்தை மாற்ற குழு அமைக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல் வதந்தியே. அது தொடர்பாக பரப்பப்படும் சன் நியூஸ் சேனலின் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader