நிவாரண நிதி அளித்தாலும் பாஜகவிற்கா வாக்களிப்பார்கள் என ஒன்றிய அமைச்சர் கூறியதாகப் பரவும் பொய் செய்தி !

பரவிய செய்தி

தமிழகம் கேட்கும் பேரிடர் நிவாரண நிதியை முழுதாக வழங்கிவிட்டால் மட்டும் தமிழ்நாட்டினர் பாஜகவிற்கா வாக்களிக்க போகிறார்கள்? – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மழையால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. எனவே தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் நிவாரண நிதியை கோரியுள்ளது.

இந்நிலையில், “தமிழ்நாடு கேட்கும் பேரிடர் நிவாரண நிதியை முழுதாக வழங்கிவிட்டால் மட்டும் தமிழ்நாட்டினர் பாஜகவிற்கா வாக்களிக்க போகிறார்கள்?” என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாகக் கூறி தினமலரின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 

உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், தினமலர் கடந்த டிசம்பர் 19 அன்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தமிழ்நாடு வெள்ள நிவாரணம் குறித்து பேசியதாக எந்த செய்தியும் வெளியிடவில்லை.

மேலும் தேடியதில் கடந்த ஏப்ரல் 19 அன்று “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நிர்வாகத்தை எளிதாக்கும் வகையில், கடந்த 9 ஆண்டுகளில் 2,000க்கும் மேற்பட்ட காலாவதியான விதிகள் மற்றும் சட்டங்களை ரத்து செய்துள்ளது –  மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்” என்று குறிப்பிட்டு தினமலர் நியூஸ் கார்டு வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.

இதன் மூலம் “9 ஆண்டுகளில் 2,000 சட்டங்கள் ரத்து: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்” என்ற தலைப்பில் கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட நியூஸ்கார்டை சிலர் தவறாக எடிட் செய்து தற்போது சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

இதே போன்று “தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது! சென்னை மழை வெள்ளம் போது முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசிடம் 5,060 கோடி நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் மத்திய அரசு தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ அவர்கள் பேட்டி” என்று கூறி தந்தி டிவியின் பெயரில் மற்றொரு போலியான நியூஸ் கார்டும் பரவி வருகிறது.

மேலும் படிக்க: வெள்ள நிவாரணத்தில் உதவித்தொகை கேட்ட சீமான் எனப் பரவும் போலி நியூஸ் கார்டு !

இதற்கு முன்பும் போலியான பல நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் தவறாக பரவின. இது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: ஸ்ரீரங்கம் கோயில் பணியாளரை தாக்கியது ஆந்திர பாஜகவினரே எனப் பரவும் போலி நியூஸ் கார்டு !

முடிவு:

நம் தேடலில், பேரிடர் நிவாரண நிதி குறித்து பாஜகவின் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங் கூறியதாகப் பரவும் தினமலர் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader