தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தை தலையில் ரூ3.5 லட்சம் கடன், இதுவே குஜராத்தில் ரூ.17,000 வருமானம் என அண்ணாமலை சொன்ன பொய் !

பரவிய செய்தி

தமிழகத்தில் பிறக்கும் குழந்தை ரூ3.5 லட்சம் கடனுடன் பிறக்கிறது, குஜராத்தில் ரூ17 ஆயிரம் லாபத்தில் பிறக்கிறது – அண்ணாமலை

மதிப்பீடு

விளக்கம்

குமாரபாளையம் பகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை(1:51:00  நிமிடம்), “தமிழ்நாட்டைக் கடன்கார மாநிலமாக மாற்றி இருக்கிறார்கள். இன்னைக்கு ரூ7.53 லட்சம் கோடி கடன். ஒவ்வொரு குடும்பத்தின் தலையின் மீதும் ரூ3.52 லட்சம் கடன் இருக்கு. குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ஆண்டவன் அருளால் ஒரு குழந்தை பிறக்கும் போது, தமிழகத்தில் ரூ3.52 லட்சம் கடனாளியாக பிறக்கிறது. இதுவே குஜராத்திற்கு போனால் ஒரு குழந்தை பிறக்கும் போது ரூ17,000 வருமானத்துடன் பிறக்கிறது. அங்கு வருமானம் அதிகம், செலவு குறைவு ” எனப் பேசி இருக்கிறார்.

X post link 

இதையடுத்து, அண்ணாமலை பேச்சு சமூக வலைதளங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

அண்ணாமலை கூறுவது போல் குஜராத் மாநிலத்தின் கடன் நிலவரம் குறித்து தேடுகையில், குஜராத் மாநிலத்தின் கடன் 3.4 லட்சம் கோடியாக அதிகரிப்பு, ஒவ்வொரு குடிமகனின் மீதும் ரூ48,500 கடன் இருப்பதாகக் கூறி 2023 மார்ச் 1ம் தேதி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. 

தமிழ்நாட்டின் கடன் குறித்து தேடுகையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்தக் கடன்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு 2023 ஜூலை 24ம் தேதி மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து இருக்கிறார். 

ஒன்றிய நிதியமைச்சர் அளித்த பதிலின்படி, இந்தியாவில் அதிகம் கடன் உடன் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. பட்ஜெட் மதிப்பீட்டின்படி(மார்ச் 2023), தமிழ்நாட்டின் கடன் ரூ7.53 லட்சம் கோடியாக உள்ளது. இரண்டாம் இடத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் ரூ7.10 கோடியுடனும், மூன்றாம் இடத்தில் மகாராஷ்டிரா ரூ6.80 கோடியுடனும் உள்ளன. இதுவே குஜராத் மாநிலத்தின் கடன் 4.23 லட்சம் கோடியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தையின் தலையில் 3.52 லட்சம் கடன் இருப்பதாக அண்ணாமலை எதன் அடிப்படையில் தெரிவித்தார் எனப் பார்க்கையில், 2023 மார்ச் மாதம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ3.25 கடன் இருப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த செய்தியில், தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இம்மதிப்பீட்டை வெளியிட்டதாகக் குறிப்பிட்டு உள்ளனர்.

தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தமிழ்நாட்டில் 2.23 கோடி குடும்ப அட்டைகளும், 7 கோடி பயனாளர்களும் உள்ளதாகத் தெரிவித்து உள்ளனர். இதன்படி தமிழ்நாட்டின் கடனை ஒவ்வொரு குடும்பத்தின் அடிப்படையில் பார்கையில், ரூ3.36 லட்சம் வருகிறது. 
தமிழ்நாட்டைப் போன்று குஜராத் மாநிலத்திற்கு பார்கையில், IPDS.Gujarat இணையதளத்தில், அம்மாநிலத்தில் 1.37 கோடி குடும்ப அட்டைகளும், 6.14 கோடி பயனாளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி குஜராத்தின் கடனை ஒவ்வொரு குடும்பத்தின் அடிப்படையில் பார்கையில், ரூ3.08 லட்சம் வருகிறது. 
.
அண்ணாமலை கூறும் கணக்கின்படி பார்த்தால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்கள் மீதுள்ள கடன் ரூ3.36 லட்சம். அதேபோல், குஜராத் மாநிலத்திற்கு பார்த்தால், ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்கள் மீதுள்ள கடன் ரூ3.08 லட்சம் வருகிறது.
.
இவ்விரு மாநில அரசு இணையதளங்களில், குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் அதன் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை மட்டுமே உள்ளன. இதைத் தவிர்த்து, குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்தவர்கள் மற்றும் குடும்ப அட்டைகளே வாங்காமல் இருப்பவர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இவ்விரு மாநிலத்திலும் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
.
முடிவு : 
.
நம் தேடலில், தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைக்கு ரூ3.5 லட்சம் கடன் இருப்பதாகவும், இதுவே குஜராத் மாநிலத்தில் பிறக்கும் குழந்தைக்கு ரூ.17,000 வருமானம் இருப்பதாக அண்ணாமலை பேசிய தகவல் தவறானது.
.
2023 பட்ஜெட் மதிப்பீட்டின் படி, தமிழ்நாட்டின் கடன் ரூ7.53 லட்சம் கோடி மற்றும் குஜராத் மாநிலத்தின் கடன் ரூ4.23 லட்சம் கோடியாக உள்ளது. குடும்ப அட்டைத்தாரர்களின் அடிப்படையில் பிரித்தால், தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்திற்கு ரூ3.36 லட்சமும், குஜராத் மாநிலத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ3.08 லட்சம் கடனும் வருகிறது என்பதையும் அறிய முடிகிறது. 
Please complete the required fields.




ஆதாரம்

Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader