தமிழர்களை இழிவுப்படுத்தி வடநாட்டவர்களுக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் பேசியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி

வடநாட்டவர் கடும் உழைப்பாளிகள் தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து கையேந்தி நிற்கின்ற அவலமான காலகட்டத்தில் தமிழகத்திற்கான உழைப்புத் தேவையை நிறைவேற்றுபவர்கள் வடநாட்டவர்தான். அவர்களுக்கு வாக்குரிமை அளித்து அவர்களை இங்கேயே நிரந்தரமாக குடியேற்ற வழி செய்யவேண்டும். ஐ- வானதி சீனிவாசன், பாஜக எம்.எல்.ஏனியர்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களை தாக்கி கொலை செய்வதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரப்பப்பட்ட வதந்திகளால் இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றம் உருவாகியது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வதந்திகளை பீகார் பாஜக தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பரப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : பீகார் தொழிலாளியை கொன்ற ஜார்கண்ட் இளைஞர்.. தமிழ்நாடு மீது பொய் பரப்பிய வடஇந்திய ஊடகங்கள் !

இந்நிலையில், தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து கையேந்தி நிற்பதாகவும், தமிழகத்திற்கான உழைப்புத் தேவையை நிறைவேற்றும் வடநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வானதி சீனிவாசன் கூறியது குறித்து ஜூனியர் விகடனின் முகநூல் பக்கத்தில் தேடுகையில், ” வெறுப்பை விதைப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்க! வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைக்கும் அமைப்புகள், அதன் தலைவர்கள், தனி மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Facebook link 

தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்களில் அவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்கள், யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதனை முதலமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும்! – வானதி சீனிவாசன், பாஜக எம்.எல்.ஏ! ” என்ற செய்தியே மார்ச் 4ம் தேதி நியூஸ் கார்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

பாஜக வானதி சீனிவாசன் பற்றி வெளியான மேற்காணும் நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து வதந்தியை பரப்பி வருகின்றனர்.

Facebook link 

வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு போலியானது என வானதி சீனிவாசனும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க : அண்ணாமலைப் படத்தை புறக்கணித்து வானதி சீனிவாசனுக்கு போஸ்டர் அடித்ததாக திமுகவினர் வதந்தி !

மேலும் படிக்க : திருக்காட்டுப்பள்ளியை மைக்கேல்பட்டி என மதம் மாற்றியதாக வதந்தியை பதிவிட்டு நீக்கிய பாஜக வானதி !

இதற்கு முன்பாக, வானதி சீனிவாசன் பற்றி பரவிய வதந்திகள் குறித்தும், அவர் பரப்பிய வதந்திகள் குறித்தும் யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாடு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து கையேந்தி நிற்பதாகவும், வடநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளித்து அவர்களை இங்கேயே நிரந்தரமாக குடியேற்ற வழி செய்யவேண்டும் எனக் கூறியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader