தமிழ்நாடு காவல்துறை FIR-ல் சாதியைக் குறிப்பிட ஒரு பகுதி இருப்பதாக அண்ணாமலை சொன்ன பொய் !
பரவிய செய்தி
தமிழ்நாடு FIR-ல் ஜாதி பெயரைக் குறிப்பிட ஒரு பகுதி உள்ளது. – அண்ணாமலை (பாஜக)
மதிப்பீடு
விளக்கம்
பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 3ம் தேதி சேலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சாதிப் பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பியது தொடர்பாகப் பேசுகையில், தமிழ்நாடு அரசின் FIR-ல் பெயர், முகவரி, தொழில், சாதி என்று இருக்கும். நமது FIR-ல் சாதி ஒரு column உள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும், அமலாக்கத்துறையைப் பொறுத்த அளவில் ஒரு சம்மன் அனுப்பப்படுகிறது என்றால் ஒரு base FIR-ஐ எடுத்துக் கொள்வார்கள். வட இந்தியாவில் பெயருடன் சாதிப் பெயர்கள் போடப்படுகிறது. நான் யூகிப்பது என்னவென்றால், அமலாக்கத்துறையில் உள்ள வட இந்திய அதிகாரிகள் தமிழ்நாட்டின் தன்மை எதுவும் தெரியாமல் சாதி பெயரைக் குறிப்பிட்டு அனுப்பி இருப்பார்கள். இதனை அமலாக்கத்துறை வருகின்ற காலங்களில் திருத்திக்கொள்ள வேண்டும் எனப் பேசியுள்ளார்.
உண்மை என்ன ?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது போலத் தமிழ்நாடு முதல் தகவல் அறிக்கையில் (FIR) சாதியைக் குறிப்பிடும் பகுதி உள்ளதா எனத் தேடியதில் அது ஒரு தவறான தகவல் என்பதை அறிய முடிந்தது.
கடந்த 2022, ஏப்ரல் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி தர்மபுரம் ஆதீனத்தின் நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்லும் போது கருப்பு கொடிகளைக் காண்பித்தும் கையில் இருந்த பதாகைகளைச் சாலையில் வீசியும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக FIR பதிவு செய்யப்படவில்லை என ஆளுநர் மாளிகை தரப்பு கூறிவந்தது. அப்போது காவல்துறையிடம் இருந்து பெறப்பட்ட FIR-ஐ உதாரணமாக பார்ப்போம்.
மேலும் படிக்க : “ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொய்கள்” வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !
அந்த FIR-ல் யாருடைய சாதிப் பெயரும் குறிப்பிடப்படவில்லை. சாதியைக் குறிப்பிடும் எந்த பகுதியும் அதில் இல்லை.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் மற்றும் சாதி மோதல் தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகள் பற்றிய விவரங்களிலேயே சாதிப் பெயரை குறிப்பிடும் வழக்கம் உள்ளது.
இவற்றில் இருந்து தமிழ்நாடு முதல் தகவல் அறிக்கையில் சாதிப் பெயர் குறிப்பிடும் பகுதி உள்ளதாக அண்ணாமலை சொன்ன தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாடு காவல்துறையின் FIR-ல் சாதிப் பெயர் குறிப்பிட ஒரு பகுதி இருப்பதாக அண்ணாமலை சொன்ன தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது.