பீகார் தொழிலாளியை கொன்ற ஜார்கண்ட் இளைஞர்.. தமிழ்நாடு மீது பொய் பரப்பிய வடஇந்திய ஊடகங்கள் !

பரவிய செய்தி
பீகார் மாநில தொழிலாளர் பவன் யாதவ் என்பவர் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், தமிழ்நாடு காவல்துறை அவர்களது மாநிலத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை எனப் பொய்யான தகவலைக் கூறுகின்றனர்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை; அத்தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் தாக்குதல் நடத்துகின்றனர்; கொலை செய்கின்றனர் எனப் பல போலி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பீகார் தொழிலாளர் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை எனத் தமிழ்நாடு காவல் துறை பொய்யான தகவல் அளிப்பதாக டைனிக் பாஸ்கர் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் பவன் யாதவ் என்ற பீகார் தொழிலாளர் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
டைனிக் பாஸ்கர் நாளிதழில் குறிப்பிட்டுள்ள பீகாரைச் சேர்ந்த பவன் யாதவ் கொலை சம்பவம் குறித்து இணையத்தில் தேடினோம். 2023, பிப்ரவரி 20ம் தேதி ‘திருப்பூரில் பீகார் இளைஞர் வெட்டிக்கொலை’ என்ற தலைப்பில் ‘தினமணி‘ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பவன் யாதவ் என்பவர் திருப்பூர், நெசவாளர் காலனி பகுதியிலுள்ள பி.எம் காம்ப்ளக்சில் வசித்து வந்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திரதாரி என்பவரும் அதே கட்டிடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். பவன் யாதவிற்கும் தனது மனைவிக்கும் தவறான பழக்கம் இருந்ததாக உபேந்திரதாரி சந்தேகப்பட்டுக் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி பவன் யாதவின் வீட்டிற்குச் சென்று தட்டி கேட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே தகராறு அதிகரித்து பவன் யாதவை உபேந்திரதாரி அறிவாளால் வெட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து பவன் யாதவ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேற்கொண்டு தேடியதில் காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை கிடைக்கப்பட்டது. இதிலிருந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியைக் கொலை செய்தது ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திரதாரி என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும், பவன் யாதவை வெட்டிவிட்டு உபேந்திரதாரி தப்பி ஓடிவிட்டதாக இறந்தவரின் சகோதரர் நிராஜ் குமார் எஃப்.ஐ.ஆர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துத் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உபேந்தரதாரியை கைது செய்துள்ளனர். இது குறித்துக் கடந்த பிப்ரவரி 24ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வதந்தி பரப்பப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் டி.சி.பி. அபிஷேக் குப்தா இந்த வழக்கின் விவரத்தை வீடியோவாக பேசி வெளியிட்டுள்ளார்
இதிலிருந்து பீகார் மாநில தொழிலாளியைக் கொலை செய்தது ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதையும், அவரை திருப்பூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் எந்த தாக்குதல் சம்பவமும் நடக்கவில்லை எனத் தமிழ்நாடு காவல் துறையினர் பொய்யான தகவல் அளிப்பதாக டைனிக் பாஸ்கர் நாளிதழ் வெளியிட்ட செய்தி உண்மை அல்ல.
அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ள கொலை சம்பவத்தில், பீகார் தொழிலாளியைக் கொலை செய்தது ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.