டாஸ்மாக் கடைக்குச் சென்றுவர இலவச பஸ் பாஸ் கேட்டதாக 2018ல் வெளியான செய்தியைப் பரப்பும் அதிமுக, பாஜகவினர் !
பரவிய செய்தி
எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள் பாருங்கள் தமிழ்நாடு முதலமைச்சர்.
மதிப்பீடு
விளக்கம்
“உள்ளூரில் கடை இல்லாததால் டாஸ்மாக் கடைக்குச் சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கவேண்டும்” என மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனுகொடுத்த செய்தியை பாஜக-வின் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் ” எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள் பாருங்கள் ” என தமிழ்நாடு முதல்வரை டக் செய்துள்ளார்.
அதே செய்தியினை அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் கரூர் மணிகண்டன் தனது பேஸ்புக் பக்கத்தில் ‘விடியல்’ என திமுக அரசினை குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பலரும் பரப்பி வருகின்றனர்.
எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள் பாருங்கள் @CMOTamilnadu @V_Senthilbalaji… 😀 pic.twitter.com/yIfT1dJadY
— C.SELVAKUMAR (@SELVAKUMARC15) December 11, 2022
உண்மை என்ன ?
பாஜக மற்றும் அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பக்கூடிய செய்தித்தாளில் “ஈரோடு. டிச.4” என்று இருப்பதைக் காண முடிந்தது. இம்மாதம் ஈரோடு மாவட்டத்தில் யாரேனும் மதுக்கடைக்குச் சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்களா எனத் தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை.
வாட் எ மேன் !! pic.twitter.com/exjL8g0Pmo
— Manoj Prabakar S (@imanojprabakar) December 4, 2018
அப்புகைப்படத்தினை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்த போது, ” பத்திரிக்கையாளர் மனோஜ் பிரபாகரன் அப்புகைப்படத்தினை 2018 டிசம்பர் 4ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதிலிருந்து இச்சம்பவம் 2018ம் ஆண்டில் நடைபெற்றது என அறிய முடிகிறது. அப்போது அதிமுக தமிழ்நாட்டை ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பரவக்கூடிய செய்தியில் உள்ள தலைப்பைக் கொண்டு இணையத்தில் தேடினோம். அதே தலைப்பில் 2018, டிசம்பர் 4ம் தேதி தினகரனில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஈரோடு மாவட்டம், வசந்தாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த செங்கோட்டையன் என்பவர், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு ஒன்றினை அளித்துள்ளார்.
அம்மனுவில், தங்கள் ஊரில் டாஸ்மாக் கடை கட்டப்பட்டுப் பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் வெளியூர்களுக்குச் சென்று குடித்து வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்திற்குச் செலவாகிறது.
எனவே, உள்ளூரில் டாஸ்மாக் கடையைத் திறக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் வெளியூர் சென்று குடித்துவிட்டு வர தமிழ்நாடு அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என மனுவில் கூறி இருக்கிறார்.
அன்றைய தேதியில் தினமலர் தனது யூடியூப் பக்கத்திலும் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததை, திமுக ஆட்சியில், அதுவும் தற்போது நடந்தது போல அதிமுக பொறுப்பாளர்களே பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : தமிழ்நாடு ‘பாஜகவின் ஐடி விங்’ தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு
முடிவு :
நம் தேடலில், டாஸ்மாக் கடைக்குச் சென்றுவர இலவச பஸ் பாஸ் கேட்டதாக அதிமுக மற்றும் பாஜகவினர் பரப்பும் செய்தி தற்போது நடந்ததல்ல. அது 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த சம்பவம் என அறிய முடிகிறது.