தெலங்கானாவில் இலவச பேருந்தில் செல்ல அடித்துக் கொள்ளும் பெண்கள் எனப் பரவும் தவறான வீடியோக்கள் !
பரவிய செய்தி
தெலுங்கான மாநில பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம்..
மதிப்பீடு
விளக்கம்
2023 சட்டசபை தேர்தலில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமயிலான அமைச்சரவை ஆட்சி செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் ‘மகாலட்சுமி திட்டத்தை‘ அரசு தற்போது தொடங்கி வைத்துள்ளது. இதன்படி தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், சிட்டி ஆர்டினரி, எக்ஸ்பிரஸ், மெட்ரோ எக்ஸ்பிரஸ், பல்லே வெலுகு என அரசின் அனைத்து வகை பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய முடியும்.
இந்நிலையில் தெலங்கானாவில் இலவச பேருந்தில் பயணிக்கும் பெண்கள் இடம் கிடைக்காததால் அடித்துக் கொண்டு சண்டை போடுவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
மேலும் அந்த வீடியோக்களில், பெண்கள் கூட்டமாக பேருந்தில் ஏறுவது போன்றும், பேருந்தின் உள்ளே சரமாரியாக அடித்துக் கொண்டு சண்டை போடுவது போன்றும், பேருந்தில் ஓட்டுனருக்கான கதவின் வழியே ஏறி இடம் பிடிப்பது போன்றும் காட்சிகள் அமைந்துள்ளன.
தெலுங்கான மாநில பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் pic.twitter.com/bHdXT4HwhE
— மினி மோகன் (@Mini52614198) December 11, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோ குறித்த செய்திகளை ஆய்வு செய்ததில், தெலங்கானாவில் இலவச மகளிர் பேருந்திற்கான “மகாலட்சுமி திட்டம்” டிசம்பர் 9 அன்று தொடங்கப்பட்டுள்ளது என்பதை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் எக்ஸ் வலைதள பக்கத்திலிருந்து அறிய முடிந்தது.
తెలంగాణ మహాలక్ష్ములకు అభినందనలు.
సోనియమ్మ ఇచ్చిన మాట ప్రకారం అన్న కార్యచరణ మొదలైంది.
తెలంగాణ ఆడబిడ్డ మోములలో ఆనందం చూడడమే ఇందిరమ్మ పాలన లక్ష్యం. అందులో భాగంగానే నేడు ఆర్టీసీ బస్సులో మహిళలకు ఉచిత ప్రయాణం పథకాన్ని కాంగ్రెస్ ప్రభుత్వం ప్రారంభించింది.
సంక్షేమానికి ఇది మొదటి… pic.twitter.com/xFOfyuPVRd
— Revanth Reddy (@revanth_anumula) December 9, 2023
மேலும் பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், இந்த வீடியோக்கள் தெலங்கானாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும் உறுதிபடுத்த முடிந்தது.
பெண்கள் பேருந்திற்குள் சரமாரியாக அடித்துக் கொண்டு சண்டை போடுவது போன்ற காட்சிகளைக் குறிப்பிட்டு கர்நாடகாவைச் சேர்ந்த Belagavivoice ஊடகம் கடந்த ஜூலை 01 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதே போன்று, ஓட்டுனரின் கதவு வழியே பேருந்திற்குள் ஏறி இருக்கையில் இடம் பிடிக்கும் மற்றொரு வீடியோவும், கடந்த ஜூன் 18 அன்றே tv8kannada965 என்ற யூடியூப் பக்கத்தில் “காங்கிரஸ் அரசுதான் வளர்ச்சியை துவக்கியது” என்ற தலைப்பில் வெளியாகி இருப்பதை காண முடிந்தது. மேலும் அந்த வீடியோவின் மேல் வலது ஓரத்தில் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்துர்க் என்ற ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், இரண்டாவதாக உள்ள வீடியோவில் உள்ள மற்ற காட்சிகளான பேருந்து ஜன்னல் வழியாக ஏறுவது, பேருந்திற்குள் சண்டை போடுவது போன்றவையும் 5 மாதங்களுக்கு முன்பே கர்நாடகாவில் எடுக்கப்பட்ட வீடியோக்களே.
மேலும் படிக்க: கர்நாடகாவில் இலவச பேருந்தில் பயணிக்க ஜன்னல் வழியாக ஏற முயன்று கையை இழந்த பெண் என பாஜகவினர் பரப்பும் பொய் !
மேலும் படிக்க: அரசு பேருந்தில் பெண்களுக்கான இலவச பயணத் திட்டத்தை நிறுத்த உள்ளதாகப் பரவும் போலிச் செய்தி !
முடிவு:
நம் தேடலில், தெலங்கானாவில் இலவச பேருந்தில் செல்ல அடித்துக் கொள்ளும் பெண்கள் என சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோக்கள் என்பதை உறுதி செய்ய முடிகிறது.