தமிழ்நாட்டின் சாலை எனத் தெலங்கானா வீடியோவைப் பரப்பும் அதிமுகவினர் !
பரவிய செய்தி
ஓட்டு போட்ட மக்களுக்கு திமுக ஆட்சியின் பரிசு.… காசுக்கு வாக்கை விற்றால் இந்த நிலைதான் மக்களே. ஸ்டாலின் தான் வராரு..
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் தேசமடைந்த நிலையில் இருக்கும் சாலைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குழிகள் நிறைந்த ஒரு மண் சாலை ஒன்றில், மழையில் நனைந்தபடியே பயணிக்கும் இருசக்கர வாகன பயணிகள் அனைவரும் வரிசையாக வண்டியிலிருந்து கீழே விழுவதைப் போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் இந்த வீடியோவை “திராவிட ஆட்சியில் சாலைகளின் நிலை இது தான்” என்று கூறி அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் உட்பட பலரும் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
ஓட்டு போட்ட மக்களுக்கு
திமுக ஆட்சியின் பரிசு….காசுக்கு வாக்கை விற்றால்
இந்த நிலைதான் மக்களே. 😢ஸ்டாலின் தான் வராரு…😂😂😂#பொம்மை_முதல்வர்
#திராவிட_மாடல் .@satyenaiadmk @GowriSankarD_ pic.twitter.com/5r62aMonxQ— Arivu Aravindhan (@ArivuAravindhan) November 7, 2023
💥ஓட்டு போட்ட மக்களுக்கு
திமுக ஆட்சியின் பரிசு.💥…காசுக்கு வாக்கை விற்றால்
இந்த நிலைதான் மக்களே. 😢ஸ்டாலின் தான் வராரு…😂😂😂#பொம்மை_முதல்வர்
#திராவிட_மாடல் #விழுப்புரம்ITWING pic.twitter.com/rcIh35O7Rp— விழுப்புரம் ITWING (@VPM_ITWING) November 7, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த சாலை தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல என்பதை அறிய முடிந்தது. மேலும் இந்த வீடியோ கடந்த செப்டம்பர் 26-ல் இருந்தே தெலங்கானா மற்றும் ஆந்திரா பகுதி மக்களால் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வந்துள்ளன என்பதையும் அறிய முடிந்தது.
పడుతూ లేస్తూ ప్రయాణం ఇలా ఉంది
బంగారు తెలంగాణ….
ఇది ఎక్కడో కాదండి మా జహీరాబాద్లో@KTRBRS గారు pic.twitter.com/JliCHEjQZW— Poola Santosh (@santosh_poola) September 26, 2023
2023 செப்டம்பர் 26ம் தேதி தெலங்கானாவின் ஜஹீராபாத் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சந்தோஷ் என்பவரது எக்ஸ் பக்கத்தில் இதே வீடியோ பதிவிடப்பட்டு இருக்கிறது.
மேலும், பரவி வரும் வீடியோவில் உள்ள அதே காட்சிகள் தெலுங்கு பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தன. அதில், “தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஜஹீராபாத்தின் புறநகர் பகுதியான அல்லானா பைபாஸ் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து பின்பு ஏறி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஒரே நாளில் சுமார் 20 பேர் கட்டுப்பாட்டை இழந்துள்ளனர். அவர்களில் சிலர் காயமடைந்தனர்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று மற்றொரு செய்தியிலும், “ ஜஹீராபாத்தின் அல்கோல் ரோடு பைபாஸ் ரோட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் ரோட்டில் முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் உள்ள மண் மழையால் நனைந்துள்ளதால், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி சாலையில் விழுகின்றனர். கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணி நிலுவையில் உள்ளதால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: ம.பியில் அடி பம்பு மூலம் சாராயம் விற்றதை திராவிட மாடல் எனப் பதிவிட்ட பாஜகவின் நாராயணன் திருப்பதி !
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் ஸ்லீப்பர் பஸ், குண்டு துளைக்காத பேருந்து எனத் தவறாகப் பரவும் பழைய படங்கள் !
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் உள்ள மோசமான சாலை எனப் பரவி வரும் வீடியோ, தெலங்கானா மாநிலத்தின் ஜஹீராபாத் பகுதியில் உள்ள அல்கோல் சாலையில் விபத்துகள் ஏற்படும் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.