கோயிலில் குண்டு வைக்க முயற்சி செய்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி எனப் பரவும் எகிப்து புகைப்படம் !
பரவிய செய்தி
கோவிலில் குண்டு வைப்பதற்காக ஏவி விடப்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதி பெங்களூரில் கைது..
மதிப்பீடு
விளக்கம்
கோயிலில் குண்டு வைப்பதற்காக புர்கா அணிந்து வந்த இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ஐ சேர்ந்த ஆண் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
கோவிலில் குண்டு வைப்பதற்காக ஏவி விடப்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதி பெங்களூரில் கைது..#பிராடு_பாஜக pic.twitter.com/hAPWilKS3t
— Manoj Dmk (@dravidanstock2k) October 19, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய புகைப்படங்களைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், அது 2017ம் ஆண்டு எகிப்தில் பெண் வேடமிட்டு குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படம் என்பதை அறிய முடிந்தது.
இது தொடர்பாக அரபிக் மொழியில் இயங்கக்கூடிய ‘Sharkia Today’ என்னும் தளத்தில் 2017, ஆகஸ்ட் 25ம் தேதி செய்தி வெளியாகியுள்ளது. அதில், எகிப்து கெய்ரோவில் உள்ள பிரபலமான மால் ஒன்றின் 8வது கேட்டுக்கு முன்னால் 90வது தெருவில் குழந்தையைக் கடத்த முயன்றவரை பொது மக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைத்து உள்ளனர்.
அந்நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர் பெண் வேடமிட்ட ஆண் என்பது தெரியவந்துள்ளது. அவர் குழந்தையைக் கடத்துவதற்கு முன்னர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ‘youm7’ என்னும் டிவிட்டர் பக்கத்திலும் பரவக் கூடிய படத்தினை 2017, ஆகஸ்ட் 26ம் தேதி பதிவிட்டுள்ளனர். அதிலும் பெண் வேடமிட்டு குழந்தையைக் கடத்த முயன்ற இளைஞர் அப்பகுதி மக்களால் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கும் இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-க்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
شاب يتنكر فى زى سيدة لخطف الأطفال بالتجمع والأهالى يسلمونه للشرطةhttps://t.co/tpX0zOHRZn pic.twitter.com/oNCpB3Gwqp
— اليوم السابع (@youm7) August 25, 2017
இவற்றில் இருந்து கோயிலில் குண்டு வைக்க புர்கா அணிந்து வந்த ஆர்.எஸ்.எஸ். நபர் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் படிக்க : இந்து குழந்தையை புர்கா அணிந்த ஆண் கடத்துவதாகப் பரப்பப்படும் பொய் வீடியோ !
இதற்கு முன்னர் புர்காவுடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : கேரளா மாலில் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்தவர் முஸ்லீம் எனப் பொய் பரப்பும் சரவண பிரசாத் !
முடிவு :
நம் தேடலில், கோயிலில் குண்டு வைப்பதற்காக ஏவி விடப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி பெங்களூரில் கைது செய்யப்பட்டதாகப் பரவும் படம் குறித்த தகவல் உண்மை அல்ல. அது 2017ம் ஆண்டு எகிப்தில் பெண் வேடமிட்ட இளைஞர் ஒருவர் குழந்தைகளைக் கடத்த முயற்சி செய்ததாகக் காவல் துறையினர் கைது செய்தபோது எடுக்கப்பட்ட படம் என்பதை அறிய முடிகிறது.