சித்த மருத்துவர் திருதணிகாசலம் மருந்தை தமிழக அரசு ஏற்றதா?| ஆதாரமில்லா தகவல்கள்.
பரவிய செய்தி
சித்த மருத்துவர் திருதணிகாசலம் அரசாங்கம் அனுமதித்த 50 கொரோனா நோயாளிகளுக்கு அவர் அளித்த சிகிச்சையினால் மூன்றே நாளில் பூரண குணமடைந்துள்ளனர். தமிழனாய் பெருமை கொள்வோம் (குணமடைந்தவர்கள் 15 நாள் கண்காணிப்பில் வைத்துள்ளனர்).
மதிப்பீடு
விளக்கம்
கோவிட்-19 நோய்த்தொற்று இந்தியாவில் பரவுவதற்கு முன்பே கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் மருந்தும், சிகிச்சையும் தன்னிடம் இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலாம் கூறி வந்தார். இதன் மூலம் அவர் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தார்.
தன்னிடம் இருக்கும் மருந்தினை சோதித்து பார்க்குமாறு திருதணிகாசலம் தொடர்ந்து வீடியோக்கள் மற்றும் முகநூல் பதிவுகளின் வாயிலாக கேட்டுக் கொண்டு வருவதை அனைவரும் அறிந்தே. இந்நிலையில், திருதணிகாசலம் மருந்தின் சோதனையில் வெற்றி கிடைத்து உள்ளதாகவும், தமிழக அரசு அதற்கான அங்கீகாரம் அளித்து இருப்பதாகவும் கூறி யூடியூப் சேனல்களில் வெளியான ஆடியோ தகவல் வைரலாகி வருகிறது.
Tamil cure எனும் யூடியூப் சேனலில் வெளியான வீடியோ முகநூலில் 10 லட்சம் பார்வையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதை உண்மை என நினைத்து மக்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
உண்மை என்ன ?
திருதணிகாசலம் மருந்தினை தமிழக அரசு சோதித்து பார்த்ததா என தேடிப் பார்த்த போது செய்தி ஊடகங்களிலோ அல்லது அரசு தரப்பிலோ எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. தமிழக அரசு தரப்பில் வழங்கப்பட்ட 50 கொரோனா நோயாளிகளுக்கு திருதாணிகாசலம் மருந்து அளிக்கப்பட்ட பின் அதன் மூலம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனையில் வைரஸ் பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்ததாகவும், எனினும் 14 நாட்கள் நோயாளிகள் கண்காணிப்பில் இருப்பார்கள் எனக் கூறியதாகவும் எங்கும் வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வமற்ற மற்றும் ஆதாரமில்லாத தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
அடுத்ததாக, திருதாணிகாசலம் உடைய முகநூல் பக்கத்தில் பரவி வரும் செய்தி தொடர்பாக ஏதேனும் கருத்து பகிர்ந்து இருந்தாரா எனத் தேடிப் பார்க்கையில், மே 1-ம் தேதி தன் முகநூலில் அவர் வெளியிட்ட வேறொரு பதிவின் கமெண்டில் கணேஷ் என்பவர் வைரலாகும் tamil cure சேனல் வீடியோவை பதிவிட்டு, வைரலாகும் தகவல் உண்மையா எனக் கேட்டு இருந்தார்.
ஆனால், அதற்கு திருதணிகாசலம் அவர்கள் ” இந்த செய்தி முகநூலில் நானும் பார்க்கிறேன் ” எனக் கூறி இருந்தார். செய்தி உண்மையா அல்லது பொய்யா என மீண்டும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை.மேலும், பரவும் செய்தி குறித்து கேட்கும் கமெண்ட்களுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்பதையும் பார்க்க முடிந்தது. தன்னைப் பற்றி வரும் தவறான செய்தியை தவறு எனக் கூற கூட அவர் தயாராக இல்லை. இது குறித்து தெளிவுப்படுத்தி இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
சமீபத்தில் திரு.ரங்கராஜ் பாண்டே திருதணிகாசலம் அவர்களிடம் பேட்டி எடுத்த வீடியோ வெளியாகி இருந்தது. இதையடுத்து, மே 2-ம் தேதி ” பாண்டேவின் நோக்கம் என்ன ” என்ற தலைப்பில் திருதணிகாசலம் தன் முகநூல் பக்கத்தில் நேரலையில் பேசி இருந்தார். அந்த வீடியோவில் தன் மருந்தினை பரிசோதித்து பார்க்குமாறும், தன் மருந்தினை உயிர் காக்க தயவு செய்து பயன்படுத்துமாறு மீண்டும் மீண்டும் கூறி இருக்கிறார். தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் எதற்காக மீண்டும் மீண்டும் அவர் அப்படி கூறப் போகிறார்.
மேலும் படிக்க : சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா ?
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், வாதசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கஷாயம் உள்ளிட்டவையை குடிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் தரப்பில் முன்பே அறிவுறுத்தப்பட்டது. பின்னர் தமிழக அரசு தரப்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. எனினும், கபசுர குடிநீர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான மருந்தில்லை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மட்டுமே வழங்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
சித்த மருத்துவர் திருதணிகாசலம் அளித்த மருந்தின் மூலம் கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமாகியதாகவும், ஆகையால் தமிழக அரசால் அங்கீகாரம் கிடைத்து உள்ளதாக வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானது. தவறான தகவலை பகிர்ந்து மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம்.