பிரதமர் மோடி தஞ்சாவூர் விமானப்படைத் தளத்தை கொண்டு வந்ததாகவும், சென்னை மெட்ரோவிற்கு ரூ72,000 கோடி ஒதுக்கியதாகவும் பரவும் பொய்

பரவிய செய்தி

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பிரதமர் மோடி செயல்படுத்திய திட்டங்களின் ஒரு சின்ன sample இது. தஞ்சாவூர் விமான படைத்தளத்தை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. சென்னையில் மெட்ரோ Phase1 மற்றும் Phase2 திட்டத்திற்காக மட்டும் 72000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல், வருகின்ற ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பல்வேறு கட்சியினரும் தாங்கள் செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும், இனி செய்யப்போகும் திட்டங்கள் குறித்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த செயல்படுத்திய திட்டங்கள் என்று கூறி 1:28 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அதில், சென்னையில் மெட்ரோ Phase1 மற்றும் Phase2 திட்டத்திற்காக மட்டும் 72000 கோடியை பிரதமர் மோடி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றும், தஞ்சாவூர் விமான படைத்தளத்தை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி என்று கூறுவதையும் காண முடிகிறது.

1940 லேயே கட்டப்பட்டு, 2013 இல் விரிவுப்படுத்தப்பட்ட தஞ்சாவூர் விமானப்படைத்தளம்:

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், பிரதமர் மோடியின் ஆட்சியில் தஞ்சாவூர் விமானப்படைத்தளம் கொண்டுவரப்பட்டது என்று கூறப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

கடந்த 1940 இல் முதன்முதலில் தஞ்சாவூர் விமானத்தளம் ராயல் விமானப்படையால் கட்டப்பட்டது என்பதையும், பின்னர் சுதந்திரத்திற்கு பின்பு 1984 இல் உருவாக்கப்பட்ட திருவனந்தபுரம் தெற்கு விமானப்படையின் (Southern Air Command) கீழ், இந்த தஞ்சாவூர் 47 Wing Formation என்னும் விமானத்தளத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும் 2013 இல் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட செய்தியின் மூலம் அறிய முடிகிறது.

மேலும் தேடியதில், தஞ்சாவூர் விமானப்படைத்தளம் விரிவுபடுத்தப்படுவது தொடர்பான செய்தி, கடந்த 2010 இல் The Hindu ஊடகத்தால் ‘தஞ்சாவூர் விமானப்படை தளம் விரைவில் பெரியதாக மாறும்’ என்ற தலைப்பில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

அதில், “தஞ்சாவூர் விமானப்படை நிலையம் 2012-ம் ஆண்டுக்குள் பெரிய விமான தளமாக செயல்படத் தொடங்கும் என இந்திய விமானப்படையின் தெற்கு விமானப் படைத் தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் சுமித் முகர்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் கடந்த 2010 இல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போதே தஞ்சாவூர் விமானப்படைத்தளம் விரிவுபடுத்தப்படுவது தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன என்பது தெளிவாகிறது.

மேலும் இந்த பணிகள் கடந்த 2013 இல் முடிக்கப்பட்டு, தஞ்சாவூரில் முழு அளவிலான IAF நிலையம், அப்போதைய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியால், கடந்த 2013 மே 27 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

பின்னர் இது கடந்த 2020 இல் தரம் உயர்த்தப்பட்டு, அதிநவீன விமான படைத்தளமாக மாற்றப்பட்டுள்ளது என்பதை 2020 ஜனவரியில் வெளியிடப்பட்டுள்ள ஜெயாபிளஸ் செய்தியின் மூலம் அறிய முடிகிறது.

எனவே தஞ்சாவூர் விமானப்படைத்தளம் பிரதமர் மோடி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

சென்னை மெட்ரோ திட்டத்திற்காக ரூ.72,868.71 கோடி ஒதுக்கியதா பாஜக அரசு ?

சென்னை மெட்ரோ இரயில் தொடர்பான முதற்கட்ட பணிகள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே மேற்கொள்ளப்பட்டது. மெட்ரோ பணிகள் குறித்து 2022 இல் PIB வெளியிட்ட தகவலில், சென்னை மெட்ரோவின் முதல் கட்ட பணிக்கான ரூ.9,622.31 கோடி ரூபாய் ஜனவரி 2014  முதல் தற்போது வரை ஒன்றிய அரசு சார்பாக அளிக்கப்பட்டுள்ளது என இடம்பெற்று இருக்கிறது.

ரூபாய் 63,246 கோடி செலவில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள்  தற்போது நடைபெற்று வருகிறது. இச்செலவினை ஒன்றிய மற்றும் மாநில அரசு 50-50 சதவீதம் எனப் பங்களிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரண்டு தொகையையும் சேர்த்து மொத்தமாக குறிப்பிட்டு உள்ளனர்.

ஆனால், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒன்றிய அரசு இதுவரையில் இன்னும் ஒப்புதலே அளிக்கவில்லை. இதற்கென எந்த நிதியும் ஒதுக்கவில்லை. PIB தளத்திலும் இது மாநில அரசின் திட்டமாக செயல்பட்டு வருகிறது என்றே குறிப்பிட்டுள்ளது.

இந்த மெட்ரோ திட்டம் குறித்தும், 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட்ட 10.76 லட்சம் கோடி நிதி குறித்து பாஜக கூறிய பொய்கள் குறித்தும் இதற்கு முன்பே ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட்ட 10.76 லட்சம் கோடி நிதி என பாஜக வெளியிட்ட அறிக்கையில் உள்ள பொய்கள்!

முடிவு:

நம் தேடலில், தஞ்சாவூர் விமான படைத்தளத்தை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி, சென்னையில் மெட்ரோ Phase1 மற்றும் Phase2 திட்டத்திற்காக மட்டும் 72,000 கோடியை அவர் ஒதுக்கீடு செய்துள்ளார் என்று பாஜகவினர் பரப்பும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

 


Update: ‘பிபிசி தமிழில்’ வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து ரூ.3,273 கோடி ரூபாயை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ளதாக இதற்கு முன்பாக எழுதி இருந்தோம். தற்போது தயானந்த் கிருஷ்ணன் என்பவர் மூலம் கிடைத்த RTI தகவலை அடிப்படையாக வைத்து அதனை திருத்தி இருக்கிறோம்.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader