ரங்கராஜ் சிறு வயதில் ஆர்.எஸ்.எஸ் உடையில் இருப்பதாக பரவும் வதந்தி !
பரவிய செய்தி
இந்தப் படத்தில் இருப்பது முன்னாள் தந்தி டிவி ரங்கராஜ் பண்டே இப்போது தெரிகிறதா இவன் யார் என்று ?
மதிப்பீடு
விளக்கம்
தந்தி டிவி சேனலில் முன்னாள் தலைமை செய்தியாசிரியராக பணியாற்றியவரும், தற்போது சாணக்யா யூடியூப் சேனல் நடத்தி ரங்கராஜ் அவர்கள் சிறு வயதில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பெற்ற போது என இளைஞர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் உடையில் கையில் துப்பாக்கி உடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2015 செப்டம்பரில் Secular Sevak Sangh Vaishali எனும் முகநூல் பக்கத்தில் மற்ற ஆர்எஸ்எஸ் நபர்களின் புகைப்படத்துடன் இப்புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. ஆனால், யார் மற்றும் எங்கு எடுத்தது உள்ளிட்ட விவரங்கள் இல்லை.
மேற்கொண்டு தேடுகையில், 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரங்கராஜ் அவர்கள் சிறு வயதில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சியில் இருந்த போது என இதே புகைப்படத்தை வைரல் செய்து இருக்கிறார்கள். அதற்கு, ரங்கராஜ் அவர்களும் மறுப்பு தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார்.
” நாம் ஏதோ எழுதிக்கொண்டிருக்க, இணையத்தில் சில நண்பர்கள் வேறு ஏதோ படம் காட்டி விவாதித்துக் கொண்டிருக்கிறார்களே என வியந்தேன். அது, ‘பயங்கரவாதி பாண்டே’வின் படமாம். அதுவும் சின்ன வயதில் எடுத்த படமாம். பார்ப்பதற்கு, என்னைப் போலவா இருக்கிறது? யார் பெற்ற பிள்ளையோ, என் பெயரால் ஏச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது. தினந்தோறும் டிவியில் பார்க்கும் பாண்டேவுக்கும், இந்தப் படத்துக்கும் ஆறு ஒற்றுமையாவது கண்டுபிடிப்பவர்களுக்கு, ஆயிரம் பொற்காசுகள் கிடைக்க வாழ்த்துகிறேன். இந்தப் படம் பரப்பும் நண்பர்களுக்கும், அதன் மூலம் என் புகழ் பரப்பும் அன்பர்களுக்கும் சொல்லிக்கொள்ள ஒன்றே ஒன்று தான் இருக்கிறது ” என 2015 ஏப்ரல் 16-ம் தேதி முகநூலில் பதிவிட்டு இருந்தார்.
ரங்கராஜ் அவர்களுக்கு 45 வயதாகிறது. ரங்கராஜ் இளமை காலத்தில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி எனக் கூறும்படி பார்த்தாலும் வைரல் செய்யப்படுவது பழைய புகைப்படம் போல இல்லை. அவருமே அதை மறுத்து விட்டார். வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருப்பவர் யார், எங்கு எடுக்கப்பட்டது என்கிற விவரங்கள் நமக்கும் கிடைக்கவில்லை.
முடிவு :
நம் தேடலில், முன்னாள் தந்தி டிவி ரங்கராஜ் சிறு வயதில் ஆர்.எஸ்.எஸ் உடையில் பயிற்சி பெற்ற போது என வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருப்பது ரங்கராஜ் அல்ல. அவரும் அதை மறுத்து 2015-ல் பதிவிட்டு இருக்கிறார். எனினும், பல ஆண்டுகளாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.