This article is from Jan 21, 2021

1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா ?| இது திருக்குறளே இல்லை !

பரவிய செய்தி

திருக்குறள் 1500 குறளின் சான்று இது… சரி… அப்ப 1330 குறளா யாரு குறைச்சிருப்பா…
அதுசரி வள்ளுவரையே மாத்துனவங்களுக்கு அவர் எழுதுன குறளை மாத்தமாட்டாங்களா என்ன.

மதிப்பீடு

விளக்கம்

1912-ம் ஆண்டு வரை திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததாகவும், தற்போது 1330 குறள்களா சுருங்கி இருப்பதாக ” திருவள்ளுவர் நாயனார் ” பெயர் குறிப்பிட்ட பழைய புத்தகத்தின் முகப்பு பக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உண்மை என்ன ? 

இது திருக்குறள் நூல் இல்லை என்பதை புத்தகத்தின் முகப்பு பக்கத்தை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். திருவள்ளுவர் நாயனார் அருளிச்செய்த ” ஞானவெட்டியான் ” 1500 பாடல் மூலமும் உரையும் என இடம்பெற்று இருக்கிறது.

திருவள்ளுவர் 1330 குறள்களை கொண்ட உலகப் பொதுமறையான திருக்குறள் நூலை மட்டும் இயற்றவில்லை, பல்வேறு நூல்களை எழுதியதாக தெரிவிக்கின்றனர். ஆனால், 1500 பாடல்களை கொண்ட ஞானவெட்டியான் எனும் நூலை எழுதியது “திருவள்ளுவ நாயனார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பலரும் உரை எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த உரையில் திருவள்ளுவரின் புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால், சிலர் திருவள்ளுவ நாயனார் திருக்குறளை இயற்றிய வள்ளுவர் அல்ல என்றும், அவர் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் கூறுகின்றனர். எனினும், திருவள்ளுவ நாயனார் எனும் பெயர் யாரைக் குறிக்கிறது என உறுதியாக தெரியவில்லை.

மேலும் படிக்க : “வரலாற்று பிழை” எனக் கட்டுரை வெளியிட்ட துக்ளக்| அரசியலுக்குள் சிக்கும் வள்ளுவர் !

திருவள்ளுவரின் உருவம், அவரின் மதம் மற்றும் சாதி குறித்த பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. தற்போது திருக்குறள் நூலை மாற்றியதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க : அண்டார்டிகாவில் கிடைத்த 3000 ஆண்டுகள் பழமையான திருக்குறளா ?| உண்மை என்ன ?

Please complete the required fields.




Back to top button
loader