This article is from Jan 13, 2020

அண்டார்டிகாவில் கிடைத்த 3000 ஆண்டுகள் பழமையான திருக்குறளா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

அன்பாளர்களே , அமெரிக்காவின் புகழ்பெற்ற நாசா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் நடத்திய ஒரு ஆய்வில் திருவள்ளுவர் தனது கைப்பட எழுதிய திருக்குறள் பக்கம் ஒன்று கிடைத்துள்ளதாம். பனியில் புதைந்திருந்த இதை கார்பன் டேட்டிங் செய்து பார்த்தபோது இதன் வயது மூன்றாயிரம் முதல் நான்காயிரம் என்று தெரியவந்ததில் அவர்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

Facebook link | archived link

மதிப்பீடு

விளக்கம்

அய்யன் வள்ளுவர் எழுதிவிட்டு சென்ற உலகப் பொதுமறையான திருக்குறள் இன்றும் உலக அளவில் படிக்கப்பட்டு வருகிறது. பழமையான திருக்குறளையும், திருவள்ளுவரையும் பெருமைப்படுத்தி பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டாலும், திருவள்ளுவரை அரசியல்படுத்தியும், திருக்குறளை மிகைப்படுத்தி தவறான தகவல்களை பரப்பவும் செய்கின்றனர்.

நாசா நிறுவனம் அண்டார்டிகாவில் நடத்திய ஆய்வில் திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் பக்கம் ஒன்று கிடைத்துள்ளதாகவும், அந்த பக்கம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பதால் நாசா அதை அழிக்க முயற்சி செய்ததாக நீண்ட கதையொன்றினை முகநூல் உள்ளிட்டவையில் பகிர்ந்து வருகின்றனர். இந்த கதை, 2016-ம் ஆண்டில் இருந்தே முகநூலில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

தொன்மையான திருக்குறள் நூலை திருவள்ளுவர் இயற்றுவது போன்று காண்பிக்கப்படும் படங்கள் அனைத்திலும் பனை ஓலையில் எழுத்தாணியைக் கொண்டு எழுதுவது போன்று இடம்பெற்று இருக்கும். புத்தகங்கள் போன்று இருக்குமா என்ன ?. பழங்காலத்தில் எண் வரிசைக்கு தமிழுக்கென்று பிரத்யேக எண் எழுத்துருக்கள் பயன்படுத்தி இருக்கக்கூடும். தற்பொழுதும் தமிழுக்கு பிரத்யேக எண் எடுத்துருக்கள் உள்ளன .

ஆனால், 3000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் எனக் கூறும் பக்கத்தில் வரிசை எண்கள் 1101, 1102 என பிரிண்ட் செய்யப்பட்ட இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அண்டார்டிகாவில் ஆய்வை மேற்கொண்டதாக குறிப்பிட்டு உள்ளனர்.

tamilelibrary என்ற இணையதளத்தில்,  ” ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளை எந்த வரி வடிவில் எழுதியிருப்பார் என்பதையும் , அந்த எழுத்துக்களின் வரிவடிவில் திருக்குறளை அமைக்க சென்னை கிறித்தவக் கல்லூரியின்  பேராசிரியர்கள் கிப்ட் சிரோமணி, எஸ்.கோவிந்தராஜன் , எம்,சந்திரசேகரன் ஆகியோர்கள் இணைந்து ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் திருவள்ளுவர் காலத்திய கல்வெட்டு எழுத்துக்களில் திருக்குறளை தந்துள்ளனர் ” என இடம்பெற்று இருக்கிறது.

இதில், கி.பி.557 முதல் 590 வரை உள்ள காலக்கட்டத்தில் காணப்பெறும் வரிவடிவ அமைப்பில் வெளியிடப்பட்ட பக்கத்தையே நாசா அண்டார்டிகாவில் கண்டுபிடித்ததாக கதையை இணைத்து பரப்பி உள்ளனர்.

மேலும் படிக்க : நாசா_வியந்தது என வைரலாகும் மீனாட்சி அம்மன் கோவில் பதிவு|உண்மை என்ன ?

நாசா வியந்த கதை என நையாண்டிக்காகவும், மிகைப்படுத்தியும் ஏராளமான கதையை பரப்பி வருகின்றனர். எனவே, தவறான பெருமைப்படுத்தும் தகவலை தவிர்த்து சரியான தகவலை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader