திருக்குறளை மலத்துடன் ஒப்பிட்டு பெரியார் பேசியதாகச் சாட்டை துரைமுருகன் சொன்ன பொய் !
பரவிய செய்தி
பெரியார் திருக்குறளை மலத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். – சாட்டை துரைமுருகன்
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது டிவிட்டர் பக்கத்தில் பெரியார் திருக்குறளை மலத்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் என ஆனைமுத்து தொகுத்த ஈ.வே.ரா சிந்தனைகள் என்ற நூலில் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.
வள்ளுவர் குறளையும் அந்தப்படியே பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்ற கண்டித்து வந்தேன் ,எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம் எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள் ! நான் இங்கே இருக்கிற மலத்தினால் (திருக்குறள் ) கெட்ட நாற்றம் வீசுகிறது ,அதை எடுத்து விடு… pic.twitter.com/TSqE9X48en
— Duraimurugan (@Saattaidurai) October 25, 2023
அப்படத்தில் ‘வள்ளுவர் குறளையும் அந்தப்படியே பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்ற கண்டித்து வந்தேன் ,எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம் எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள் ! நான் இங்கே இருக்கிற மலத்தினால் (திருக்குறள்) கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தல் வேறு என்ன வைப்பது என்றா கேட்பது ? என்று பதில் கூறுவேன்’ எனப் பெரியார் பேசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
இது குறித்து ஆய்வு செய்ததில், பெரியார் திருக்குறள் குறித்துப் பேசியதைத் திரித்து தவறாகப் பரப்பி வருவதை அறிய முடிந்தது.
தந்தை பெரியார் 1950, மே 23ம் தேதி பெங்களூர் திருவள்ளுவர் கழக ஆண்டு விழாவில் பேசியது விடுதலையில் 1950, மே மாதம் 27, 29, 30, 31 ஆகிய தேதிகளில் வெளியாகியுள்ளது. இந்த உரை பெரியார் களஞ்சியம் தொகுப்பு 37ல் (திருக்குறள் – வள்ளுவர்) “அறிவாளி ஆராய்ச்சிக்காரர் அந்த நாள் மூடப்பழக்கத்தைச் சாடியவர் வள்ளுவர்” என்கிற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
அதில், 183வது பக்கத்தில் “வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் ‘இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா’ என்று பதில் கூறுவேன்.
ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக் கூடாது என்று கருதி அந்தப்படியாகவே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு அறிவாளிகள் என்றால் பண்டிதர்களோடு அல்ல பொது அறிவு மக்களோடு திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குரல் மென்மைபற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். நான் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை. அது குறளாசிரியர் கருத்தல்ல என்று எடுத்துக்கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாஸ்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக்காட்டினார்கள்.
அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றி பேசுகிறேன். அதுவும் அதையே ஆதாரமாக (Authoritive) அத்தாரிடேவ் எடுத்துக் கொண்டு அல்ல; நான் சொல்லுகிற கருத்து அதிலும் இருக்கிறது பார்” என்று கூறிவந்தேன். சிறிது குறை இருந்தாலும் இப்போதைக்கு இது இருக்கட்டும் என்று கருதினேன்.
புராணக் கருத்துக்களிலும், மூடநம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் நம் மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்தபின், மூடக்கருத்துகள் ஆட்டங்கண்ட பின்தான் குறளின் பொருளை உணரும் அறிவு மக்களுக்கு உண்டாகும் என்று கருதி முதலில் மூடக் கருத்துகளை அகற்றும் பணியில் பிரச்சாரம் புரிந்து வந்தேன் இன்று மக்களுக்கு கொஞ்சம் அறிவுத் தெளிவு, பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால் இன்று குறளைப்பற்றி பேசுகிறேன்” எனக் கூறியதின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
அது மட்டுமின்றி மலம் என்பதற்குத் திருக்குறள் என அடைப்புக் குறிக்குள் சாட்டை துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார். பெரியாரின் உரையில் அப்படி எதுவும் குறிப்பிடவில்லை.
மேலும் பெரியார் அந்த உரையின் கடைசியில் (பக்கம் 198) “இந்தப்படியாக வள்ளுவர் அநேக நற்கருத்துகளை நம் வாழ்விற்கு ஏற்ற கருத்துகளை எடுத்துக் கூறியிருக்கிறார். எனவே நாம் திருக்குறளை நன்கு கற்று அதன் அடிப்படையில் நம்வாழ்வு முறையை வகுக்க வேண்டும். குறள் மக்களிடத்தில் பரவுவதற்கான முறையில் நாம் பணிபுரிய வேண்டும். வையமெல்லாம் குறள் புகழ், குறள் பண்பு ஓங்குக!”என்றுள்ளார்.
திருக்குறளுக்கு மனு சாஸ்திரத்தின் படி உரை எழுதியிருந்த பரிமேலழகரின் உரையைப் படித்து தவறாகப் புரிந்து கொண்டதையும், பிறகு குறள் பற்றி நன்கு அறிந்ததும் தனது நிலைப்பாட்டை மாற்றி குறள் குறித்து பிரச்சாரம் செய்து வருவதாகவுமே பெரியார் பேசியுள்ளார்.
அவர் பேசியதின் சிறு பகுதியை மட்டும் எடுத்து தவறாகத் திரித்து பொய் பரப்பி வருகின்றனர். இதற்கு முன்னரும் பெரியார் குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : பெரியார் சுயசாதி பற்று கொண்டவர் என சீமான் கூறியது உண்மையா ?
மேலும் படிக்க : தமிழ், தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் எனப் பெரியார் பேசினாரா ?
முடிவு :
நம் தேடலில், பெரியார் திருக்குறளை மலத்துடன் ஒப்பிட்டுப் பேசியதாகச் சாட்டை துரைமுருகன் கூறியது தவறான தகவல். மனு சாஸ்திரப்படி எழுதப்பட்டிருந்த திருக்குறள் உரையைப் படித்து தவறாகப் புரிந்து கொண்டதையும், பிறகு திருக்குறள் பற்றி உண்மை அறிந்ததும் அதனை அனைத்து தரப்பு மக்களும் படிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருவதையுமே அவர் பேசியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.