எம்பி திருமாவளவன் வெளியிட்ட புத்தகத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பும் வலதுசாரிகள் !
பரவிய செய்தி
மதம்,இனம்,மொழி அடிப்படையில் எந்தவித காழ்ப்புணர்ச்சியோ,வெறுப்போ கொள்ளமாட்டேன்னு அரசியல் அமைப்பு மேல சத்திய பிரமாணம் எடுக்குறவனுங்க செய்யுற செயலா இது ? அரபுக்கள் நாம் இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளனர்.
மதிப்பீடு
விளக்கம்
சென்னை குமணன் சாவடியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் விசிக நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்கள் சேர்ந்து இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என்ற புத்தகம் ஒன்றை வெளியிட்டனர். அதில் அரபுகள் நாம் இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என எழுதியிருந்ததாகவும், அது இந்துக்களுக்கு எதிராக உள்ளதாகவும் வலதுசாரிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
மதமென பிரிந்தது போதும்னு சகோதரத்துவத்துடன் இருந்த தமிழக நடு நிலை இந்துக்களிடம் இந்து மத உணர்வைதூண்டியது 8 வருடங்களாக மத்தியில் ஆளும் பா.ஜ.க வா (or) கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழகத்தை ஆளும் தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளுமா?
என்னை இந்து வெறியனாக்கியது தி.மு.க..
உங்களை???? pic.twitter.com/kgO7O3u48t
— MURUGAVEL (@MURUGAV93396051) September 21, 2022
எப்படி அரபுக்கள் ? அரபு நாட்டை சேர்ந்தவருக்கா பிறந்தீர்கள் ? சொந்த நாட்டுக்கு உண்மையா இருங்கடா. pic.twitter.com/qibPCSd01R
— Swami Vivekananda Book Centre 🚩 (@book_swami) September 20, 2022
உண்மை என்ன ?
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அந்தப் புகைப்படத்தைப் பற்றித் தேடிய பொழுது, அந்த நிகழ்வு 2022ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி சென்னையின் குமணன் சாவடியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக நடந்த பாசிசம் முறியடிப்போம் எனும் மாநாட்டில் வெளியானதாகத் தெரியவந்தது.
அந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ஆகிய இருவரும் சேர்ந்து இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என்ற புத்தகத்தை வெளியிட்டனர். இந்த நிகழ்வின் வீடியோ வினவு யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் 2 மணி 42 நிமிடங்கள் கழித்து இந்தப் புத்தகத்தை வெளியிடும் தருணம் பதிவாகி உள்ளது. அதிலும் அரபுகள் நாம் என்ற வார்த்தை எங்கும் இல்லை.
மேலும், புத்தக வெளியீட்டின் புகைப்படத்தை எம்பி திருமாவளவனும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் அரபுக்கள் நாம் என்ற வார்த்தை இல்லை.
சனாதன சங்கிகளின் இழிபுத்தி இது தான்… pic.twitter.com/ap6FFJWUYH
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 22, 2022
இது வலதுசாரிகளால் பரப்பப்படும் செய்தி பொய் பரப்புரை எனத் திருமாவளவன் மற்றும் ஜவாஹிருல்லா இருவரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் புத்தகத்துடன் வீடியோ பதிவிட்டு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், எம்பி திருமாவளவன் அரபுக்கள் நாம் இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என்ற புத்தகத்தை வெளியிடுவதாகப் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என வெளியிடப்பட்ட புத்தகத்தில் எடிட் செய்து பொய் பரப்புரையை செய்கின்றனர் என அறிய முடிகிறது.