எம்பி திருமாவளவன் இந்து பெண்களுக்கு எதிராகவும், கோயில்களை இடிக்க சொன்னதாகவும் பரவும் பொய் !

பரவிய செய்தி

இந்து பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்று சொன்ன கட்சியைத் தோற்கடியுங்கள். ரோஷமுள்ள இந்துக்களே.. வ.உ.சியின் பேத்தி மரகத மீனாட்சி ராஜா கோரிக்கை..

X Link

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து இன்று மாலையுடன் பூத் சிலிப் கொடுக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் பலரும் அரசியல் தலைவர்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களை தீவிரமாகப் பரப்பிவரும் நிலையில், பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று எம்பி திருமாவளவன் கூறியுள்ளார், எனவே அவரை இந்தத் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று கூறி பெண் ஒருவர் பேசுவது போன்ற 2:20 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அதில், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான வஉசியின் பேத்தி மரகதமீனாட்சி ராஜா என்று பெயர் குறிப்பிட்டு, அவர் எம்பி திருமாவளவனுக்கு எதிராக பேசுவதையும் காண முடிகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதே வீடியோ கடந்த 2020 இல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.

எனவே எம்பி திருமாவளவன் இது குறித்து பேசியுள்ள வீடியோ குறித்து தேடிப் பார்த்தோம். Periyar TV யூடியூப் பக்கத்தில் 2020 அக்டோபர் 28 அன்று “சனாதனத்தைத் தோலுரித்த எழுச்சித் தமிழர்!” என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டிருந்தது.

அதில், “சனாதனதர்மம் பெண்களை பற்றி என்ன சொல்கிறது? பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மம் அதாவது மனு தர்மத்தின் படி அனைத்து பெண்களுமே விபச்சாரிகள் தான். கடவுளால் அப்படித் தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இவர் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும் பொருந்தும், அடிநிலையில் இருக்கிற பெண்களுக்கும் பொருந்தும். 

எல்லா பெண்களுக்கும் தீட்டு உண்டு. எல்லா பெண்களும் பிறந்து குழந்தைகளாக இருக்கின்ற வரையில் தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். திருமணம் ஆன பின்பு கணவனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பிள்ளை பெற்ற பிறகு மகனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பின்பு ஆண் பேரக்குழந்தைகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கருதுவது அவர்கள் மீதுள்ள அக்கறையால் அல்ல. அவர்கள் கற்போடு இருக்கவேண்டும் என்பதற்காக தான். கற்பு என்பதை சனாதன தர்மம் புனிதமானதாக கருதுகிறது” என்று குறிப்பிட்டு அவர் பேசியுள்ளதைக் காண முடிகிறது. 

இதன் மூலம், மனு தர்மத்தின் படி “அனைத்து பெண்களுமே விபச்சாரிகள் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் பேசியுள்ள வீடியோவை, “அனைத்து பெண்களுமே விபச்சாரிகள் தான்” எம்பி திருமாவளவனே கூறியது போன்று எடிட் செய்து கடந்த 2020 இல் இருந்தே சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 

மேலும் இதே போன்று சிவன் கோவில்களை இடித்து புத்த விஹாரங்களை கட்ட விசிக குரல் கொடுத்துள்ளது என்று கூறியும் இதற்கு முன்பு சமூக ஊடகங்களில் பலர் தவறாகப் பரப்பினர். அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

மேலும் படிக்க: சிவன் கோவில்களை இடித்து புத்த விஹார்களை கட்ட விசிக குரல் கொடுக்கும் என பரவும் போலி ட்வீட் !

முடிவு:

நம் தேடலில், “அனைத்து பெண்களுமே விபச்சாரிகள் தான்” என்று திருமாவளவன் கூறியதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader