திருமாவளவனை தரையில் உட்கார வைத்தாரா ஸ்டாலின் ?| ஃபேஸ்புக் பதிவு.
பரவிய செய்தி
தலித் என்ற காரணத்தால் திருமாவை இருக்கையில் அமர வைக்காமல் தரையில் அமர வைத்து அவமானப்படுத்திய ஸ்டாலின் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தகவல் அனைவருக்கும் போய் சேரும் வரை பகிருங்கள்.
Facebook link | archived link
மதிப்பீடு
விளக்கம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தரையில் அமர வைத்து அவமானப்படுத்தியதாக ஓர் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கி உள்ளனர்.
திமுக கட்சியின் கூட்டணியில் அங்கம் வசிக்கும் விசிக கட்சி, கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளில் நின்று வெற்றிப் பெற்றது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றார். அவர்களின் கூட்டணி வருகிற சட்டசபைத் தேர்தலிலும் நீடிக்கும் நிலை நிலவுகிறது.
இந்நிலையில், திருமாவளவனை திமுக தலைவர் ஸ்டாலின் அவமானப்படுத்தியதாக பரப்பப்படும் புகைப்படத்தில் திருமாவளவன் அமர்ந்து இருக்கும் பகுதி போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டுள்ளது என தெளிவாய் தெரிகிறது.
இப்படி பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2018 ஜூலை 26-ம் தேதி மாலைமலர் இணையதளத்தில் வெளியான செய்தி கிடைத்தது. திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க அரசியல் தலைவர்கள் வருகை தந்தது குறித்து வெளியாகி இருக்கிறது. அந்த செய்தியில் இடம்பெற்ற புகைப்படத்தில், ஸ்டாலின் அருகே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அமர்ந்து பேசுவது இடம்பெற்று இருக்கிறது. அவர்களுடன் டி.ஆர்.பாலு மற்றும் துரைமுருகன் ஆகியோர் உள்ளனர்.
2018-ல் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க தமிழக அரசியல் தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். அப்பொழுது, கமல்ஹாசன் மற்றும் திருமாவளவன் ஆகியோரும் வந்துள்ளனர். அதில், கமல்ஹாசன் ஸ்டாலினை சந்தித்த புகைப்படத்தில் திருமாவளவன் தரையில் அமர்ந்து இருப்பது போன்று ஃபோட்டோஷாப் செய்தி வதந்தியை பரப்புகின்றனர்.
முடிவு :
நமது தேடலில் இருந்து, தலித் என்ற காரணத்தால் திருமாவை இருக்கையில் அமர வைக்காமல் தரையில் அமர வைத்து ஸ்டாலின் அவமானப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம் போலியானது என அறிய முடிகிறது.