தமிழர்களை எறும்புகள் என துக்ளக் இதழ் கார்ட்டூன் வெளியிட்டதா ?
பரவிய செய்தி
குருமூர்த்தி தமிழர்களை எறும்புகள் என்று கேவலப்படுத்தி கார்ட்டூன் போட்டுள்ளார் இதற்கு அதிமுக மற்றும் ரஜினி மக்கள் மன்ற நண்பர்கள் என்ன கருத்து சொல்ல விரும்புகிறீர்கள்?
மதிப்பீடு
விளக்கம்
துக்ளக் வார இதழின் முகப்பு பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து வரையப்பட்டுள்ள கார்ட்டூனில் வாகனத்திற்கு முன்பாக எறும்புகளை வரைந்து எதிர்ப்பாளர்கள், தமிழர்கள் எனக் குறிப்பிட்டு உள்ளதாக இப்புகைப்படம் ட்விட்டர், முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குருமூர்த்தி தமிழர்களை எறும்புகள் என்று கேவலப்படுத்தி கார்ட்டூன் போட்டுள்ளார்
இதற்கு அதிமுக மற்றும் ரஜினி மக்கள் மன்ற நண்பர்கள் என்ன கருத்து சொல்ல விரும்புகிறீர்கள்? pic.twitter.com/tv3g0pfNHq
— Jeyachandran 🖤♥️ (@maha2017jaya) December 10, 2020
தமிழர்களை இழிவுப்படுத்தியதாக கண்டனத்துடன் வைரல் செய்யப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. வைரலாகும் புகைப்படம் குறித்து தேடிப் பார்க்கையில், அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என அறிய முடிந்தது.
தமிழக அரசியலில் தலைவர் ரஜினியின் வருகை பற்றி 7.6.2017 வார துக்ளக் இதழில் வெளியான எச்சரிக்கை+தலையங்கம்.#SuperStar #Rajinikanth#incredibala pic.twitter.com/KNkNv66rDE
— K. Balaji (@incredibala) June 16, 2017
2017-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி வெளியான துக்ளக் வார இதழில் ரஜினிகாந்த் குறித்து வெளியான சர்ச்சைக்குரிய கார்ட்டூனில் எதிர்ப்பாளர்களை எறும்புகள் என குறிப்பிட்டு வரைந்து இருப்பது உண்மையே. ஆனால், தமிழர்கள் எனக் குறிப்பிடவில்லை. தமிழர்கள் என எடிட் செய்து எழுதி இருக்கிறார்கள்.
2017-ல் சர்ச்சையான துக்ளக் கார்ட்டூனில் எடிட் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என தொடர்ந்து கருத்து கூறி வருபவர்களில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும் ஒருவர்.
ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்த பிறகு ரஜினிகாந்திற்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே உருவாகி வரும் சமூக வலைதள மோதலை பார்க்க முடிகிறது. இதற்கிடையில், வதந்திகளையும் இணைத்து பதிவிட்டு வருகிறார்கள்.