‘திப்பு சுல்தான் ஒரு கொடுமைக்கார ஜிஹாதி’ என கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறியதாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி

கர்நாடக நீதிமன்றம் : திப்பு சுல்தான் ஒரு கொடுமைக்கார ஜிஹாதி. அவன் தன் ராஜ்ஜியத்தை காப்பாற்றிக்கொள்ள போரிட்டானே ஒழிய, பாரத தேச சுதந்திரத்திற்காக அல்ல. இந்துக்களை படுகொலை, ரேப் செய்து இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்தான்.

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டு வரை மைசூர் பகுதியை ஆட்சி செய்த மன்னரான திப்பு சுல்தான், ஒரு கொடுமைக்கார ஜிகாதி என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியான சுப்ரோ கமல் முகர்ஜி கூறியதாகக் கூறி புகைபடம் ஒன்று சமூக ஊடகங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

மேலும் அப்பதிவுகளில் “திப்பு சுல்தான் தன் ராஜ்ஜியத்தை காப்பாற்றிக்கொள்ள போரிட்டாரே ஒழிய, இந்திய சுதந்திரத்திற்காக போராடவில்லை. இந்துக்களை படுகொலை மற்றும் வன்புணர்வு செய்து இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்தார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை என்ன ?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இந்த செய்தி கடந்த 2020-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதை அறிய முடிந்தது.

இதுகுறித்து தேடியதில், கடந்த 2016-ல் “திப்பு சுல்தான் ஒரு மன்னரே, சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது” என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் “திப்பு ஜெயந்தி ஏன் கொண்டாடப்பட வேண்டும்? திப்பு ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல, மாறாக தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக எதிரிகளை எதிர்த்துப் போராடிய மன்னன்” என்று தலைமை நீதிபதி சுப்ரோ கமல் முகர்ஜி கூறியுள்ளார். 

மற்றொரு நீதிபதியான ஆர்.பி.புதிஹால், இதனால் குடகு மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வகுப்புவாத பதற்றம் அதிகரிக்கும். கடந்த ஆண்டு கொண்டாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது. என்று கூறியுள்ளார்.” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு குறித்து கடந்த 2016, நவம்பர் 3 அன்று கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் ஆய்வு செய்து பார்த்தோம்.  அதில், “திப்பு ஜெயந்தி கொண்டாடலாமா வேண்டாமா என்பது அரசின் கொள்கை விவகாரம். எனவே கொண்டாட்டங்களுக்கு எதிராக தனது குறைகளை தெரிவிக்க கர்நாடக அரசின் தலைமைச் செயலாளரிடம் மனுதாரருக்கு மனு அளிக்க உத்தரவிட்டுள்ளோம்.” என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டு அந்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளதைக் காண முடிந்தது.

ஆனால் இந்த தீர்ப்பில் எந்த இடத்திலும், பரவி வரும் செய்திகளில் உள்ளவாறு, திப்பு சுல்தான் ஒரு கொடூரமான ஜிகாதி என்றோ, இந்துக்களை படுகொலை மற்றும் வன்புணர்வு செய்து இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்தார் என்றோ குறிப்பிடப்படவில்லை. எனவே பரவி வரும் செய்திகள் தவறானவை.

மேலும் இது கடந்த 2016-ல் வழங்கப்பட்ட தீர்ப்பு. தற்போது நவம்பர் 10 அன்று திப்பு சுல்தான் ஜெயந்தி வரவுள்ள நிலையில் வகுப்புவாதத்தை தூண்டும் வண்ணம் சிலர் பழைய தீர்ப்பை தவறாக திரித்துப் பரப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க: செங்கோலுக்கு பதிலாக திப்பு சுல்தான் வாளை வைக்க வேண்டும் என சுகி சிவம் கூறியதாகப் பரவும் பொய் !

மேலும் படிக்க: லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது திப்பு சுல்தானின் படம் எனப் பரவும் வதந்தி !

முடிவு:

நம் தேடலில், திப்பு சுல்தான் ஒரு கொடூரமான ஜிகாதி, இந்துக்களை படுகொலை மற்றும் வன்புணர்வு செய்து இஸ்லாமத்திற்கு மதமாற்றம் செய்தார் என்று கர்நாடக நீதிமன்றம் கூறியதாகப் பரப்பப்படும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader