திருப்பதி பெருமாள் சிலையைப் பொம்மை என்று எம்.பி கனிமொழி கூறியதாகப் பரவும் பொய் !

பரவிய செய்தி

திருப்பதி கோவிலுக்கு பாராளுமன்ற குழு வுடன் சென்று வந்த பிறகு கோவில் வாசலில் கனிமொழி கூறியது::- ‘- இத்தனை கோடி பேர்கள் பைத்தியமாக வணங்கும் ஒரு பொம்மை எப்படி இருக்கும் என்று காணவே இங்கு வந்தேன்.” என்னுடன் வந்தவர்கள் பயபக்தியுடன் அந்த பொம்மையை வணங்கும் போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.”… மறவாதீர்! திமுக வுக்கு ஓட்டு போடுவது தெய்வ குற்றம்.

மதிப்பீடு

விளக்கம்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திருப்பதி கோயிலுக்குப் பாராளுமன்ற குழுவுடன் சென்று வந்த பிறகு கோயில் வாசலில் நின்று கூறியதாக வாட்சப்பில் ஒர் தகவல் பரவி வருகிறது.

அதில், ‘இத்தனை கோடி பேர்கள் பைத்தியமாக வணங்கும் ஒரு பொம்மை எப்படி இருக்கும் என்று காணவே இங்கு வந்தேன். என்னுடன் வந்தவர்கள் பயபக்தியுடன் அந்த பொம்மையை வணங்கும் போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை’ என்று கனிமொழி கூறியதாக உள்ளது. மேலும் திமுகவிற்கு ஓட்டுப் போடுவது தெய்வ குற்றம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் இதே தகவல் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்துள்ளது. 

உண்மை என்ன ? 

எம்.பி கனிமொழி திருப்பதி கோயிலில் உள்ள சிலையைப் பொம்மை என்று கூறியதாகப் பரவும் தகவல் குறித்துத் தேடியதில் அவர் அப்படி எந்த ஒரு கருத்தையும் பேசவில்லை என்பதை அறிய முடிந்தது. 

பரவக் கூடிய தகவல் தொடர்பாக முக்கிய வார்த்தைகளைக் கொண்டு தேடியதில், 2018 ஜனவரி மாதம் Tirupati கோவில் பற்றிய சர்ச்சை பேச்சு’ என்ற தலைப்பில் கனிமொழி பேசிய வீடியோ ஒன்று News Glitz Tamil யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் கனிமொழி பேசியது, “நானும் பார்க்கிறேன். திருப்பதியில் வேண்டுதல் நிறைவேறி காசு போடுபவர்கள் எல்லாம் பணக்காரர்கள் தான். கோடி கோடியாகக் கிரீடம் செய்து கொடுக்கிறார்கள். லட்சக் கணக்கில் பணத்தைக் கொண்டு போய் உண்டியலில் கொட்டுகிறார்கள். ஆனால், இந்த ஏழை குழந்தைகளின் கண்ணீரும் வலியும் அந்த கடவுளுக்குப் புரியவில்லை என்றால் அந்த கடவுள் வேண்டாம். 

டெல்லியில் எம்.பி-யாக இருக்கும் போது கமிட்டிகளில் நம்மை நியமிப்பார்கள். உள்துறை கமிட்டியில் நான் இருந்தேன். அதன் தலைவராக இருந்த வெங்கையா நாயுடு அவர்கள் எங்களைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்றார். சரி என்ன இருக்கிறது எனப் பார்த்து விட்டு வருவோமே என்று நான் சென்றேன். Its very well done institution. நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். Its wonderfully, beautifully run institution. I agree.

நாங்கள் எல்லாம் எம்பி. கடவுளைப் பார்க்க ஸ்பெஷலாக ஒரு வழியை வைத்து இருந்தார்கள். கடவுளுக்கு முன்னாள் அனைவரும் ஒன்று என்று சொல்கிறார்களே அது பொய். பணம் அதிகம் கொடுத்து டிக்கெட் வாங்கினால் ஸ்பெசல் தரிசனம். இல்லையென்றால் 10 மணி நேரம், 20 மணி நேரம், இரண்டு நாள் நிற்க வேண்டும். அதுதான் கடவுள். 

நாங்கள் நின்று கொண்டு இருந்தோம். என் அருகிலே இருந்த ஒரு எம்.பி என்னிடம் சொன்னார். நீ கடவுள் இல்லை, கடவுள் இல்லை எனச் சொல்கிறாய். இத்தனை மக்கள், இத்தனை மணி நேரம் காத்துக்கொண்டு இருந்து அந்த கடவுளைப் பார்ப்பதற்கு நின்று கொண்டு இருக்கிறார்கள். அந்த கடவுள் அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்து இருக்கிறார். அவர்களைப் பாதுகாக்கிறார். நீ எப்படி நம்பாமல் இருக்க முடியும். 

நான் திரும்பிச் சொன்னேன், கடவுளுக்கு எதிரே நேராகக் கடவுளின் கண்ணில் படக்கூடிய அளவிற்கு இங்கு ஒரு உண்டியல் உள்ளது. அதற்கு எதற்குத் துப்பாக்கியுடன் பாதுகாப்பு? கோயிலை நடத்துபவர்களே கடவுள் அந்த உண்டியலைப் பாதுகாப்பார் என நம்பவில்லை. நான் நம்ப வேண்டும் என்றால் என்ன நியாயம் என்று கேட்டேன். 

நம்மைப் பார்த்து கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சொல்லக் கூடியவர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லக் கூடியவர்களிடம் உண்மையில் நம்பிக்கை உள்ளதா? உன்னுடைய கடவுளைத் தவிர மற்ற கடவுள்களை எல்லாம் இல்லை என்கிறாய். நான் அந்த ஒரு கடவுளையும் சேர்த்து கடவுள் இல்லை என்று சொல்கிறேன்’ எனப் பேசியுள்ளார்.

கனிமொழி எந்த ஒரு இடத்திலும் பரவக் கூடிய தகவலில் இருப்பது போல், பக்தர்களைப் பைத்தியம் என்றோ, கடவுளின் சிலையைப் பொம்மை என்றோ பேசவில்லை. மதத்தில் உள்ள பாகுபாடு, மூட நம்பிக்கை குறித்தே கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசாத விஷயத்தைப் போலியாக எடிட் செய்து பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 

கனிமொழி இப்படிப் பேசியதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து அப்போதே எதிர்ப்புகள் வந்துள்ளது. மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய தெலங்கானா மாவட்ட நீதிமன்றத்தில் கரீம்நகர் பாஜக மாவட்ட தலைவர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இது குறித்து இந்து தமிழ் திசையில் வெளியான செய்தியிலும் கனிமொழி பேசியதாக மேற்கண்ட தகவலே இடம்பெற்றுள்ளது. 

திருப்பதி கோவில் உள்பட பல்வேறு போலிச் செய்திகள் எம்.பி கனிமொழி பெயரில் போலியான பக்கங்கள் மூலம் பரப்பப்படுவதாகக் கூறி கடந்த 2018 ஜூலையில் திமுக தரப்பு வழக்கறிஞர் காவல்துறையிடம் புகார் அளித்ததாக தி நியூஸ் மினிட் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், கனிமொழி திருப்பதியில் பக்தர்களைப் பைத்தியம் என்றும், சிலையைப் பொம்மை என்றும் கூறியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அவர் மதத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளையும், மூட நம்பிக்கைகளையும் பற்றி மட்டுமே பேசியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader