சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கொடநாடு என்றதும் எடப்பாடி பழனிச்சாமி வெளியே சென்றாரா ?
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
2023 ஜனவரி 09ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடநாடு எஸ்டேட் குறித்து பேச துவங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து வெளியே செல்வதாக 26 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொடநாடு என்றதுமே..
ஓட்டம் பிடித்த எடுபிடி.. pic.twitter.com/oqRhflMyqa— ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) January 9, 2023
வீடியோவில், ” கொடநாடு எஸ்டேட் ஒன்றும் சாதாரண இடமல்ல. அதை எதிர்க்கட்சி தலைவர் மறந்துற கூடாது. உங்கள் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அந்த கொடநாடு எஸ்டேட்டில் தங்கிருக்கிறார். இதெல்லாம் எதிர்க்கட்சியினருக்கு தெரியாதா ?.அந்த சம்பவம் நடந்த நேரத்தில் நீங்கள் தான் முதலமைச்சர். என்ன நடவடிக்கை எடுத்தீங்க ” எனக் கேள்வி கேட்கிறார்.
இந்த வீடியோவை திமுகவினர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ், அமமுக மட்டுமின்றி அதிமுகவின் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் உட்பட பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன ?
2023ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 09ம் தேதி ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் சில வார்த்தைகளை ஆளுநர் வாசிக்காமல் சுயமாக பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதையடுத்து, ஆளுநரின் உரைக்கு எதிராக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை வாசிக்கும் போதே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒபிஎஸ் உள்பட அதிமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.
வைரல் செய்யப்படும் வீடியோவில் தந்தி டிவி சேனலின் லோகோ இடம்பெற்று உள்ளது. இதுகுறித்து தேடும் போது, ” முதல்வா் ஸ்டாலின் பேசியபோது வெளியேறிய ஈபிஎஸ்.. பின்னாலேயே சென்ற ஓபிஎஸ் ” எனும் தலைப்பில் தந்தி டிவி வெளியிட்ட வீடியோ கிடைத்தது.
இந்த வீடியோவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” பேரவையில் மிகவும் கண்ணியத்தோடு, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ” என பேசத் தொடங்கிய உடனே எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினர் வெளியேறுகின்றனர். அந்த உரையில் கொடநாடு எஸ்டேட் குறித்து முதலமைச்சர் பேசவில்லை, ஆளுநர் உரைக்கு எதிரான தீர்மானம் குறித்தே பேசி இருக்கிறார்.
வைரல் செய்யப்படும் வீடியோவில் மு.க.ஸ்டாலின் கொடநாடு எஸ்டேட் பற்றி பேசிய ஆடியோ கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போது பேசியது. மேற்காணும் வீடியோவின் 1 மணி நேரம் 9 வது நிமிடத்தில் முதலமைச்சர் பேசுவதை பார்க்கலாம்.
2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் கொடநாடு எஸ்டேட் பற்றி பேசிய ஆடியோவையும், 2023 ஜனவரி கூட்டத்தொடரில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறிய காட்சியையும் இணைத்து தவறாக பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடநாடு பற்றி பேசத் துவங்கியதும் எடப்பாடி பழனிசாமி வெளியே சென்றதாக பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.