நேர்காணலில் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் !
பரவிய செய்தி
ஆளுநர் சட்ட சபையில் பேசும்போது மாற்றம் செய்து கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள் ஆளுநர் மாளிகை வட்டாரத்திற்குத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. – ராம ஸ்ரீநிவாசன்
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. அவர் தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட உரையை முழுமையாகப் படிக்காதது வருத்தம் அளிக்கிறது என முதல்வர் சட்டசபையில் பேசி இருந்தார். மேலும், ஒப்புதல் பெறப்பட்ட வாசகங்கள் மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் ‘தி டிபேட்’ என்ற யூடியூப் பக்கத்திற்கு நேர்காணல் அளித்திருந்தார். அந்நேர்காணலின் 8 வது நிமிடத்தில், சட்டமன்றத்தில் ஆளுநர் பேசக்கூடிய உரையை மாநில அரசு தயாரித்து அதனை ஆளுநரின் கவனத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த முறை ஆளுநரின் உரை ஜனவரி 6ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனைப் படித்த ஆளுநர் சில கருத்துக்களைச் சேர்க்க வேண்டும் என்றும், சில கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அப்போது அரசு தரப்பிலிருந்து இது அச்சுக்குச் சென்றுவிட்டது. இதற்குப் பிறகு திருத்துவதென்பது கடினம். எனவே, “ஆளுநர் பேசும்போது எதைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமோ சேர்த்துக் கொள்ளலாம், எதைத் தவிர்க்க வேண்டுமோ தவிர்த்துக் கொள்ளலாம் என அரசு தரப்பு உயர் அதிகாரிகள் ஆளுநர் வட்டாரங்களுக்கு, ராஜ்பவனுக்குத் தகவல் சொல்லி உள்ளனர்.” இதற்கான ஆவணங்கள் உள்ளது எனக் குறிப்பிடுகிறார்.
அப்போது நெறியாளர் குறிக்கிட்டு, எங்கேயும் அப்படி ஒரு ஆவணம் வரவில்லை எனக் கூறுகிறார். அதற்கு ஸ்ரீநிவாசன் ராஜ்பவன் ரிலீஸ் கொடுத்துள்ளனர். நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்கிறார். மீண்டும் நெறியாளர், ஆளுநர் என்ன வேண்டுமானாலும் மாற்றிப் படித்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்ட ஆவணத்தைக் காண்பியுங்கள் என வாதிடுகிறார்.
உண்மை என்ன ?
பாஜக மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிவாசன் கூறுவது போல ஆளுநர் சட்டசபை உரை குறித்து ஆளுநர் மாளிகை ஏதேனும் அறிக்கை வெளியிட்டுள்ளதா என்பது குறித்துத் தேடினோம். ராஜ்பவன் அதிகாரப் பூர்வ சமூக வலைத்தளங்களில் அப்படி எந்த ஒரு அறிக்கையும் பதிவிடப்படவில்லை.
மேற்கொண்டு இந்த செய்தியை உறுதி செய்து கொள்வதற்காக ‘யூடர்ன்’ ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் ஆளுநர் மாளிகையை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். “அப்படி எந்த ஒரு அறிக்கையையும், விளக்கத்தையும் எங்களது தரப்பிலிருந்து அதிகாரப் பூர்வமாக அளிக்கவில்லை” என மக்கள் தொடர்பு அலுவலகத்தில் (PRO) தெரிவிக்கப்பட்டது.
இதிலிருந்து ஸ்ரீநிவாசன் பேசியது ஒரு ஆதாரமற்ற செய்தி என்பது தெரிய வருகிறது. அதே நேர்காணலில் 16வது நிமிடத்திற்கு மேல் ஸ்ரீநிவாசன் தனது தொலைப்பேசியைப் பார்த்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்ததாக சில வரிகளைப் படித்துக் காண்பிக்கிறார்.
அறிக்கையே வெளியிடாத போது எப்படி படித்து காண்பிக்க முடியும். ஒன்று அவர் பொய் பேசி இருக்க வேண்டும். அல்லது தனது வாட்சபில் வந்த பார்வர்டு செய்தியைப் படித்துவிட்டு நேர்காணலில் பேசி இருக்க வேண்டும்.
ஆனால், இதே தகவலைக் கொண்டு நியூஸ் 18 தமிழ் நாடு, நியூஸ் 7, குமுதம், பாலிமர் போன்ற ஊடகங்கள் “ஆளுநர் உரை குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம், ஆளுநர் வட்டாரங்கள் தகவல்” எனச் செய்திகளை வெளியிட்டிருந்தன. அதற்கும் முன்னதாக இது குறித்து பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரும், தமிழ்நாடு பாஜகவும் டிவிட்டரில் பதிவு செய்திருந்தன. அப்போதே இச்செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் கட்டுரை வெளியிட்டிருந்தது.
மேலும் படிக்க : ஆளுநர் உரை குறித்து எந்த விளக்கமும் ஆளுநர் மாளிகை அளிக்கவில்லை!
முடிவு :
நம் தேடலில், சட்டசபையில் ஆளுநர் உரை குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டதாக, பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் கூறிய தகவல் உண்மை அல்ல. அப்படி எந்த ஒரு அறிக்கையும் ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை என்பதை அறிய முடிகிறது.