தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கான நிதியை விட சினிமாவிற்கு அதிக நிதி ஒதுக்கியதாகப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி

பள்ளிகளுக்கு 360  கோடி, திரைப்பட துறைக்கு 500 கோடி. 

X post link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில்(பிப்ரவரி 19ம் தேதி) 2024-2025 ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்தார். இதில், பள்ளிகளுக்கு 360  கோடி, திரைப்பட துறைக்கு 500 கோடியை திமுக அரசு ஒதுக்கியதாக இரு செய்தி கார்டுகளை ஒப்பிட்டு கல்வியை விட சினிமாவிற்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளதாக தமிழ்நாடு பாஜகவின் செல்வகுமார், மகிளா மோர்ச்சா மாநிலப் பொதுச்செயலாளர் மோகனப்பிரியா, சவுதா மணி உள்பட பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இரண்டு செய்தி கார்டுகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்த ரூ. 360 கோடி ஒதுக்கீடு என்றும், பூந்தமல்லியில் ரூ.500 கோடி ஒதுக்கீட்டில் அதிநவீனத் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்றும் இடம்பெற்றுள்ளது.

உண்மை என்ன ? 

2024-2025 ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை உரையில், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது என்றே தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 40,299  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டை ஒப்பீடுகையில் தற்போது ரூ3,743 கோடி அதிகம்.

2022ல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் ஆனது ” மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் ” என மாற்றியமைக்கப்பட்டு, அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

புதுமைப் பெண் எனப் பெயரிடப்பட்ட இத்திட்டத்தில், 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ரூ1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்தகைய புதுமைப் பெண் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்றும், இந்த ஆண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் 2024-25 நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெண்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அறிவிக்கப்பட்ட புதுமைப் பெண் திட்டம் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அல்ல.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் திட்டத்தை விரிவுப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியை பள்ளிகளுக்கு ரூ360 கோடி எனத் தவறாகப் பரப்பி உள்ளனர்.

இதுமட்டுமின்றி, புதுமைப் பெண் திட்டம் போன்று அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு “தமிழ்ப் புதல்வன் “ எனும் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதற்காக வரும் நிதியாண்டில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்தக் கனவுத் தொழிற்சாலையில் VFX Animation மற்றும் LED Wall போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்புத் தளங்கள். படத் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கான (Post Production) கட்டமைப்புகள் மற்றும் படப்பிடிப்பிற்குத் தேவையான கட்டமைப்புகள், அரசு தனியார் பங்களிப்புடன் (Public-Private Partnership) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க : ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு பெயரை மாற்றி பட்ஜெட்டில் அறிவித்ததாக வானதி ஸ்ரீனிவாசன் சொன்ன பொய் !

மேலும் படிக்க :  ‘இன்னுயிர் காப்போம்’ , ‘குட் சமாரிட்டன்’ திட்டம்.. அண்ணாமலை சொல்லும் பொய்.. முழுமையான அலசல் !

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு 360 கோடியும், திரைப்பட துறைக்கு 500 கோடி ஒதுக்கி இருப்பதாக ஒப்பிட்டு பாஜகவினரால் பரப்பப்படும் தகவல் தவறானது. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தவே ரூ. 370 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது, இது பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி அல்ல. இத்திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படுகிறது என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader