ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு பெயரை மாற்றி பட்ஜெட்டில் அறிவித்ததாக வானதி ஸ்ரீனிவாசன் சொன்ன பொய் !
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில்(பிப்ரவரி 19ம் தேதி) 2024-2025 ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்தார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் பல ஒன்றிய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு பாஜகவினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறொரு பெயரை வைத்து அறிவித்து இருக்கிறார்கள். இதில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் என ஸ்மார்ட் சிட்டி திட்டமாக இருக்கலாம், அனைவருக்கும் வீடு வழங்கும் ஆவாஸ் யோஜனா என்பது கலைஞரின் கனவு இல்லம் என்கிற பெயரில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் ” எனப் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறொரு பெயரை வைத்து அறிவித்திருக்கிறார்கள் pic.twitter.com/RCVL1pUjd0
— Vanathi Srinivasan (@VanathiBJP) February 19, 2024
இதையே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
உண்மை என்ன ?
பிரதம மந்திரி வீடு vs கலைஞரின் கனவு இல்லம் :
ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரும் வகையில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின்(60:40) பங்களிப்புடன் 1985ல் ராஜீவ் காந்தியால் தொடங்கப்பட்ட “இந்திரா ஆவாஸ் யோஜனா” (IAY) எனும் திட்டத்தின் பெயர் 2015ல் “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY)” என மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வீடு கட்ட உதவும் திட்டம் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் பங்களிப்புடன் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதற்காக அரசின் மானியத்தொகை மொத்தமாக ரூ 2.75 லட்சம் அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022ல், ” பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கான அலகுத் தொகை ரூ.1.20 இலட்சம் என ஒன்றிய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதி பங்கீடு 60:40 என்ற விகிதத்தில் (ஒன்றிய அரசு ரூ.72,000/- மற்றும் மாநில அரசு 48,000/-) உள்ளது. மேலும் தமிழக அரசு, கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக, அலகுத் தொகையுடன் ரூ.50,000/- கூடுதல் நிதியாக மாநில நிதியிலிருந்து வழங்குகிறது. எனவே, தமிழ்நாட்டில் ஒரு வீட்டின் மொத்த அலகுத் தொகை ரூ.1.70 இலட்சம் ஆகும். பயனாளிகளுக்கு வீடு கட்டி முடிப்பதில் உள்ள சிரமத்தைக் குறைக்க 2,57,925 வீடுகளின் கட்டுமான பணிக்காக ஒரு வீட்டிற்கு தலா ரூ.70,000/- மாநில அரசால் கூடுதலாக வழங்கப்படுகிறது ” எனக் கூறப்பட்டுள்ளது.
இதன்படி பார்க்கையில், ஒரு வீடு கட்ட ஒன்றிய அரசு 72,000 ரூபாயும், தமிழ்நாடு அரசு 1,68,000 ரூபாயும் மானியத் தொகையாக அளிக்கிறது.
கலைஞரின் கனவு இல்லம் குறித்த தமிழ்நாடு அரசின் 2024-25 பட்ஜெட் அறிவிப்பில், ஊரகப் பகுதிகளில் ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் குடிசைகளுக்குப் பதிலாக நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடித் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1975 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் எட்டு இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக, 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.50 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும். தேர்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும். அறிவியல்பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தேர்வு முறை, தங்கள் கனவு இல்லங்களை பயனாளிகள் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு என குறிப்பிடத்தக்க அம்சங்களைத் தாங்கிய இப்புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம்’ என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் தமிழ்நாடு அரசு 1,68,000 அளிப்பதாக தெரிவித்து இருக்கிறது. தற்போது புதிய திட்டமாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்படி, வரும் நிதியாண்டில் 1 லட்சம் வீடுகள் 3.50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்றும், இது 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.