ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு பெயரை மாற்றி பட்ஜெட்டில் அறிவித்ததாக வானதி ஸ்ரீனிவாசன் சொன்ன பொய் !

பரவிய செய்தி

மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறொரு பெயரை வைத்து அறிவித்திருக்கிறார்கள்.

X post link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில்(பிப்ரவரி 19ம் தேதி) 2024-2025 ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்தார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் பல ஒன்றிய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு பாஜகவினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறொரு பெயரை வைத்து அறிவித்து இருக்கிறார்கள். இதில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் என ஸ்மார்ட் சிட்டி திட்டமாக இருக்கலாம், அனைவருக்கும் வீடு வழங்கும் ஆவாஸ் யோஜனா என்பது கலைஞரின் கனவு இல்லம் என்கிற பெயரில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் ” எனப் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதையே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

உண்மை என்ன ?  

பிரதம மந்திரி வீடு vs கலைஞரின் கனவு இல்லம் : 

ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரும் வகையில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின்(60:40) பங்களிப்புடன் 1985ல் ராஜீவ் காந்தியால் தொடங்கப்பட்ட “இந்திரா ஆவாஸ் யோஜனா” (IAY) எனும் திட்டத்தின் பெயர் 2015ல் “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY)” என மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வீடு கட்ட உதவும் திட்டம் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் பங்களிப்புடன் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதற்காக அரசின் மானியத்தொகை மொத்தமாக ரூ 2.75 லட்சம் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022ல், ” பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கான அலகுத் தொகை ரூ.1.20 இலட்சம் என ஒன்றிய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதி பங்கீடு 60:40 என்ற விகிதத்தில் (ஒன்றிய அரசு ரூ.72,000/- மற்றும் மாநில அரசு 48,000/-) உள்ளது. மேலும் தமிழக அரசு, கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக, அலகுத் தொகையுடன் ரூ.50,000/- கூடுதல் நிதியாக மாநில நிதியிலிருந்து வழங்குகிறது. எனவே, தமிழ்நாட்டில் ஒரு வீட்டின் மொத்த அலகுத் தொகை ரூ.1.70 இலட்சம் ஆகும். பயனாளிகளுக்கு வீடு கட்டி முடிப்பதில் உள்ள சிரமத்தைக் குறைக்க 2,57,925 வீடுகளின் கட்டுமான பணிக்காக ஒரு வீட்டிற்கு தலா ரூ.70,000/- மாநில அரசால் கூடுதலாக வழங்கப்படுகிறது ” எனக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி பார்க்கையில், ஒரு வீடு கட்ட ஒன்றிய அரசு 72,000 ரூபாயும், தமிழ்நாடு அரசு 1,68,000 ரூபாயும் மானியத் தொகையாக அளிக்கிறது.

கலைஞரின் கனவு இல்லம் குறித்த தமிழ்நாடு அரசின் 2024-25 பட்ஜெட் அறிவிப்பில், ஊரகப் பகுதிகளில் ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் குடிசைகளுக்குப் பதிலாக நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடித் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1975 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் எட்டு இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக, 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.50 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும். தேர்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும். அறிவியல்பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தேர்வு முறை, தங்கள் கனவு இல்லங்களை பயனாளிகள் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு என குறிப்பிடத்தக்க அம்சங்களைத் தாங்கிய இப்புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம்’ என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் தமிழ்நாடு அரசு 1,68,000 அளிப்பதாக தெரிவித்து இருக்கிறது. தற்போது புதிய திட்டமாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்படி, வரும் நிதியாண்டில் 1 லட்சம் வீடுகள் 3.50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்றும், இது 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி vs கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் :
2015ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில் உள்கட்டமைப்பு, பொதுமக்கள் தொடர்புடைய பல்வேறு வசதிகளை மேம்படுத்துதல் என அந்நகரத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தது. இதில், தமிழ்நாடில் சென்னை உள்பட 11 நகரங்கள் அறிவிக்கப்பட்டன. பின்னர், இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 110 நகரங்களாகவும், தமிழ்நாட்டில் 12 நகரங்களாக அதிகரிக்கப்பட்டது. இதற்காக நிதி பங்கீடு ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு முறையே 50:50 என்ற முறையில் உள்ளது.
ஆனால், 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையிலேயே கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (KNMT) அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு இருக்கிறது.
2021 செப்டம்பரில் வெளியிட்ட அரசாணையில், தமிழ்நாட்டில் 14  மாநகராட்சிகள் (சென்னையைத் தவிர்த்து) 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் சிட்டி மிஷன், அம்ரூத் உள்ளிட்ட திட்டங்கள் மாநகராட்சி மற்றும் முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இவற்றில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 11 நகரங்களும், அம்ரூத் திட்டத்தில் 28 நகரங்கள் மட்டுமே செயல்படுகின்றன. எனவே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள உள்கட்டமைப்பு குறைபாடுகளை பூர்த்தி செய்ய 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
.
2021 ஆகஸ்ட் பட்ஜெட் அறிவிப்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1000 கோடியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2350 கோடியும், அம்ரூத் திட்டத்துக்கு ரூ1450 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டும் வெவ்வேறான திட்டம் என்பதையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழ்நாடு அரசே நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதை அறிய முடிகிறது.
Please complete the required fields.




ஆதாரம்

Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader