’10 ஆயிரம் வேப்பங்கன்றுகளை வளர்க்க ரூ.2 கோடி’ எனத் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் பற்றி தவறானச் செய்தி வெளியிட்ட பிபிசி!
பரவிய செய்தி
பத்தாயிரம் வேப்பங்கன்றுகள் வளர்க்க இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள். அப்போது ஒரு வேப்பங்கன்றின் விலை 2000 ரூபாய் வருகிறது. இரண்டு ரூபாய்க்கு ஒரு வேப்பங்கன்று சந்தையில் கிடைக்கிறது அல்லது காக்கா கக்கூஸ் போனால் அதில் பத்து வேப்பமரம் வளரும் இதை போய் 2000 ரூபாய் செலவு செய்து வளர்க்கிறார்களாம். இவர்கள் எவ்வளவு ஊழல் செய்கிறார்கள் என்பது புரிகிறது .
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பிப்ரவரி 20ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். வேளான் பட்ஜெட் தொடர்பாக ‘10 ஆயிரம் வேப்பங்கன்றுகளை வளர்க்க ரூ.2 கோடியா? தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் பற்றி விவசாயிகள் கருத்து’ என்ற தலைப்பில் ’பிபிசி தமிழ்’ கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரை தொடர்புடைய நியூஸ் கார்டு ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
பிபிசி-யின் கார்டை பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ‘பத்தாயிரம் வேப்பங்கன்றுகள் வளர்க்க இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள். அப்போது ஒரு வேப்பங்கன்றின் விலை 2000 ரூபாய் வருகிறது’ என விமர்சித்து வருகின்றனர்.
10 ஆயிரம் வேப்பங்கன்றுகள் வளர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள். ஒரு வேப்பங்கன்றின் விலை 2000 ரூபாய் வருகிறது.
இரண்டு ரூபாய்க்கு ஒரு வேப்பங்கன்று சந்தையில் கிடைக்கிறது, காக்கா கக்கூஸ் போனால் அதில் பத்து வேப்பமரம் வளரும் இதை போய் 2000 ரூபாய் செலவு செய்து வளர்க்கிறார்களம். pic.twitter.com/Bg4yogZSAZ
— பிரியகுமரன் (@kumaranofficia) February 22, 2024
உண்மை என்ன?
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2024-25 நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கையில் ’முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 22 இனங்கள் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த 22 இனங்களில் வேப்ப மரக்கன்றுகள் தொடர்பான திட்டமும் உள்ளது. அதில், ”வேம்பினைப் பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 இலட்சம் வேப்ப மரக்கன்றுகள் வேளாண்காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், வேளாண் நிதிநிலை அறிக்கை மற்றும் வேப்ப மரக்கன்று திட்டம் தொடர்பாகச் செய்தி வெளியிட்ட பிபிசி 10,000 வேப்ப மரக்கன்றுகளுக்கு ரூ.2 கோடி அரசு ஒதுக்கி உள்ளதாக தவறானச் செய்தியை பரப்பி இருக்கிறது.
மேலும் படிக்க : தெருநாய்களைக் கொல்ல தமிழ்நாடு அரசு ரூ.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகப் பரவும் தவறான தகவல்!
மேலும் படிக்க : தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கான நிதியை விட சினிமாவிற்கு அதிக நிதி ஒதுக்கியதாகப் பரவும் தவறான தகவல் !
இதேபோல், தமிழ்நாடு பட்ஜெட் குறித்து பரப்பப்பட்ட வேறு சில தவறான செய்திகள் குறித்தும் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
தமிழ்நாடு அரசு 10 ஆயிரம் வேப்பங்கன்றுகளை வளர்க்க ரூ.2 கோடி என வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளதாக பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தி தவறானது. 10 லட்ச மரக்கன்றுகளுக்குத் தான் ரூ.2 கோடி என பட்ஜெட்டில் உள்ளது.