முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டினருக்கு பொங்கல் தொகுப்பு கொடுத்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !
பரவிய செய்தி
வெளிநாட்டினருக்கு ரேஷன் கார்டு உண்டா ரூ1000 ரொக்கமும் கொடுக்கப்பட்டதா @CMOTamilnadu ?
மதிப்பீடு
விளக்கம்
2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் அட்டைத்தாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.நிர்மல்குமார், ” வெளிநாட்டினருக்கு ரேசன் கார்டு உண்டா, ரூ1000 ரொக்கமும் கொடுக்கப்பட்டதா ? ” என்ற கேள்வி உடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கிய புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
வெளிநாட்டினருக்கு ரேஷன் கார்டு உண்டா ரூ1000 ரொக்கமும் கொடுக்கப்பட்டதா @CMOTamilnadu ? pic.twitter.com/AbLfkZXzLw
— kgokul manikandan (@KgokulM) January 7, 2023
சங்கி :- வெளிநாட்டினருக்கு ரேஷன் கார்டு உண்டா ரூ1000 ரொக்கமும் கொடுக்கப்பட்டதா..? 🤔🤔
உ.பி :- தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாட்டினருக்கும் ரூ 1000 ரொக்க பணமும், கரும்பும் கொடுத்த பாரி வள்ளல் ஸ்டாலின் வாழ்க..! 😍 🖤❤️ pic.twitter.com/ZQVbnCF8IV
— Kanna Pandiyan SKP 🇮🇳 (@KannaPandiyaSKP) January 7, 2023
பாஜக ஐடி விங் தலைவர் ட்விட்டரில் பதிவிட்டதை தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்தவர்கள் பலரும் அதே புகைப்படம் மற்றும் தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
பாஜகவினரால் பரப்பப்படும் புகைப்படம் குறித்து தேடுகையில், ” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும் சென்னை அடையாறில் உள்ள பிரம்மஞான சபையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கினார். உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் ஆகியோர் இருந்தனர் ” என தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு வெளியாகி இருக்கிறது.
மேலும், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜனவர் 7ம் தேதி ட்விட்டரில், ” மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அடையார் Theosophical society இல் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார்கள், அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற 140 பேருக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தருவார்கள். இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தந்து மகிழ்ந்தார்கள். ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அடையார் Theosophical society இல் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார்கள், அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற 140 பேருக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தருவார்கள் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தந்து மகிழ்ந்தார்கள். @mkstalin #Masubramanian #TNHealthminister pic.twitter.com/kShW25eKya
— Subramanian.Ma (@Subramanian_ma) January 7, 2023
அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ட்விட்டர் பதிவில் இடம்பெற்ற புகைப்படங்களில் வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் நபரும் இருப்பதை பார்க்க முடிந்தது. அமைச்சரின் பதிவின்படி, வழங்கபட்ட பரிசு அரசு தரப்பில் வழங்கப்படவில்லை. அந்த பரிசுகளில் தமிழக அரசின் முத்திரையும் இல்லை என்பது தெளிவாகிறது.
பரப்பப்படும் புகைப்படத்தில் இருக்கும் வயதான பெண்மணி ஆங்கிலோ இந்தியர் என ஒன் இந்தியா தமிழ் செய்தியிலும், வெளிநாட்டவர் என ஏபிபி நாடு செய்தியிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், அவர் குறித்த உறுதியான தகவல் எங்கும் பதிவாகவில்லை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9ம் தேதி சென்னையில் தலைமை செயலகத்துக்கு அருகே உள்ள அன்னை சத்யா நகர் ரேசன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொள்ளும் சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட 140 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து வெளிநாட்டினருக்கு ரேசன் கார்டு உண்டா, ரூ1000 ரொக்கமும் கொடுக்கப்பட்டதா என தமிழ்நாடு பாஜகவினர் தவறாக தகவலை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.