தமிழ்நாடு அரசு பேருந்தின் பயணச் சீட்டில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்வதாக பாஜகவினர் பரப்பும் வதந்தி !
பரவிய செய்தி
திருட்டு திராவிட மாடல் அரசு உடனடியாக அகற்றப்பட வேண்டும்… இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்தில் அரசுப் பயணச்சீட்டு மூலம் கிருஸ்துவ மதமாற்றத்திற்கு தொடர்ந்து உதவி வருவது மிகவும் வேதனையான விஷயம்..!
மதிப்பீடு
விளக்கம்
இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டின் அரசு பேருந்து பயணச்சீட்டு மூலம் கிருஸ்தவ மதமாற்றத்திற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகக் கூறி மத சார்ந்த வாசகம் இடம்பெற்று இருக்கும் பயணச் சீட்டின் படத்தை பாஜகவினர் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் பயணச் சீட்டில், “ உன் சந்ததியின் மேல் என் ஆவியையும், என் ஆசீர்வாதத்தை யும் ஊற்றுவேன் ” என இடம்பெற்ற வாசகத்திற்கு மேலே இரத்தினம் நாடார் என இடம்பெற்று இருக்கிறது.
அரசு பேருந்தின் பயண சீட்டில் இப்படி பெயர்கள் இடம்பெறுவதில்லை. அரசு போக்குவரத்து கழகங்களின் பெயரே இடம்பெறும். உதாரணத்திற்கு, சென்னை மாநகரில் இயங்கக்கூடிய பேருந்துகளில் வழங்கப்படும் பயணச் சீட்டில் ” மாநகர போக்குவரத்து கழகம் சென்னை ” என்ற முத்திரை இடம்பெற்று உள்ளது.
ஆகையால், வைரல் செய்யப்படும் பயண சீட்டில் உள்ள ” இரத்தினம் நாடார் ” என்ற பெயரைக் கொண்டு தேடுகையில், ” இரத்தினம் நாடார் மினிபஸ் “ எனும் பெயரில் இயங்கும் பேருந்து சேவை தொடர்பான முகநூல் பக்கத்தை காண முடிந்தது.
அந்த முகநூலின் தகவலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை பகுதியில் மினிபஸ் சேவை இயங்கி வருவதை அறிய முடிந்தது. மேலும், அந்த முகநூல் பக்கத்தில், பேருந்தில் சிலுவை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம்பெற்று இருக்கின்றன. ஆகவே, வைரல் செய்யப்படும் பயணச்சீட்டு தனியார் பேருந்து நிறுவனத்தால் வழங்கப்பட்டது எனத் தெரிய வருகிறது.
மேலும் படிக்க : 2018ல் உடைந்த அரசு பேருந்து படிக்கட்டு படத்தை திமுக ஆட்சி எனப் பரப்பும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ !
மேலும் படிக்க : கட்டணமில்லா பேருந்து ரத்து, அரசு பஸ் கட்டணம் உயர்வு என வதந்தி பரப்பும் தமிழக பாஜக பொருளாளர் !
இதற்கு முன்பாகவும், திமுக ஆட்சியில் அரசு பேருந்து குறித்து பல்வேறு போலிச் செய்திகள் பரப்பப்பட்டு உள்ளன. அது தொடர்பான கட்டுரைகளும் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாடு அரசு பேருந்தின் பயணச் சீட்டில் கிருஸ்தவ மதப்பிரச்சாரம் செய்யும் வாசகம் அச்சிட்டு உள்ளதாக பரப்பப்படும் தகவல் தவறானது. வைரல் செய்யப்படும் பயணச்சீட்டு கன்னியாகுமரியைச் சேர்ந்த தனியார் மினிபஸ் பேருந்தில் வழங்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.