மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்குத் தமிழ்நாடு அரசு காரணமென பாஜகவினர் பரப்பும் பொய்!

பரவிய செய்தி

இவ்வளவு காலம் அனுமதியோ கொடுக்காமல் செங்கலை தூக்கிட்டு திரிஞ்ச சின்ன தத்திய என்ன செய்ய?

 X link

எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தற்போது தான் தமிழக அரசாங்கம் கொடுத்துள்ளது இதை மறைத்து செங்கல்லை வைத்து அரசியல் செய்த தகுதி இல்லாத அரசியல் தலைவர்கள்

 X link

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் எய்ம்ஸ் (AIIMS -India Institute of Medical Sciences) மருத்துவமனை அமைப்பது தொடர்பாக 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசு அறிவித்தது. அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து 2019, ஜனவரி மாதம் மதுரையில் எய்ம்ஸ் கட்டுவதற்காகப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் எய்ம்ஸ் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் 2021ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த (2024,ஏப்ரல்) நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படாதது குறித்த விமர்சனத்தை திமுக தீவிரமாக முன் வைத்தது.

இதற்கிடையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு தற்போதுதான் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. அனுமதி வழங்காமலேயே மருத்துவமனை கட்டப்படவில்லை என திமுகவினர் இத்தனை நாட்களாக விமர்சித்ததாக ஒரு செய்தியை பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 

உண்மை என்ன?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு கடந்த 20ம் தேதி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான செய்தி தினகரன், இந்து தமிழ் திசை, தினமலர் முதலிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மே மாதம்  2ம் தேதி  எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை எய்ம்ஸ் நிர்வாகம் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்துள்ளது.

அதன் அடிப்படையில் மே, 10ம் தேதி இத்திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாமென சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு தமிழ்நாடு அரசிடம் பரிந்துரைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மே, 20ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. 

அதாவது, எய்ம்ஸ் நிர்வாகம் மே, 2ம் தேதி தான் சுற்றுச்சூழல் அனுமதி கோரி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதற்குத் தமிழ்நாடு அரசு 20ம் தேதி அனுமதி வழங்கிவிட்டது. ஆனால், 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டிய இத்திட்டத்திற்கு இன்னும் பணி தொடங்காததற்குத் தமிழ்நாடு அரசுதான் காரணம் என்பது போல் பாஜகவினர் பொய் பிரச்சாரத்தினை முன்னெடுத்து வருகின்றனர். 

இது ஒருபுறம் இருக்க 2023, டிசம்பர் நிலவரப்படி மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்காக ரூ.1977.8 கோடி செலவாகுமென ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், 18.37 கோடி ரூபாய் மட்டுமே 2023, டிசம்பர் மாத நிலவரப்படி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுரையில் AIIMS கட்ட JICA-விடம் கடன் பெறத் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக நாராயணன் திருப்பதி சொன்ன பொய்!

மதுரை எய்ம்ஸ் குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 95% முடிந்ததாக பொய் சொல்லும் பாஜக !

முடிவு: 

கடந்த மே மாதம் 2ம் தேதி எய்ம்ஸ் நிர்வாகம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து மே, 20ம் தேதி தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader