தமிழ்நாடு அரசு இதுவரை 500 டன் கோவில் தங்க நகைகளை உருக்கியுள்ளதாகப் பரவும் வாட்சாப் வதந்திகள்!
பரவிய செய்தி
1977 ல் இருந்தே திராவிட அரசுகள் இதைத்தான் செய்கிறது, அதன் மூலம் இதுவரை 500 டன் தங்கம் உருக்கப்பட்டு வங்கியில் வைக்கப்பட்டு அதன் மூலம் அரசுக்கு 11 கோடிரூபாய் வட்டியாக வந்துள்ளது என்றும் தமிழகஅரசு நீதிமன்றத்தில் சொல்லியது. அதாவது ஒரு கிலோ தங்கத்தின் இன்றைய மதிப்பு ₹37,50,000 என்றால 500 டன் நகையின் மதிப்பு கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி. ஒரு ஆண்டுக்கு ₹7500 கோடி வட்டி வரும்போது 50 வருஷமாக ₹11 கோடி மட்டும் வட்டியாக வந்துள்ளது என்று அரசு பொய் சொல்கிறது.
மதிப்பீடு
விளக்கம்
இதுவரை 500 டன் தங்கம் உருக்கப்பட்டு வங்கியில் வைக்கப்பட்டுள்ளது என்றும், அதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு 11 கோடிரூபாய் வட்டியாக வந்துள்ளது என்றும் தமிழகஅரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. 1977 இல் இருந்தே திராவிட அரசுகள் இதைத்தான் செய்கிறது. அதாவது ஒரு கிலோ தங்கத்தின் இன்றைய மதிப்பு ₹37,50,000 என்றால 500 டன் நகையின் மதிப்பு கிட்டத்தட்ட ₹2 லட்சம் கோடி.
ஒரு ஆண்டுக்கு ₹7500 கோடி வட்டி வரும்போது 50 வருஷமாக ₹11 கோடி மட்டும் வட்டியாக வந்துள்ளது என்று அரசு பொய் சொல்கிறது என்று கூறி வாட்சாப் செய்தி ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. மேலும் இதே செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதையும் அறிய முடிகிறது.
யாரும் சளைக்கவில்லை போலும்…
கீழ்க்கண்ட கடிதத்தைப் படித்துப் பாருங்கள்…
அனுப்புநர் :
P.S.கனகராஜ் (தலைவர்)
தமிழ்நாடு நீர்நிலைகள் மற்றும் கோயில் நிலங்கள் பாதுகாப்பு சங்கம்.பெறுநர்:
ஆணையாளர் அவர்கள்.
இந்து சமய அறநிலையத்துறை.
நுங்கம்பாக்கம்.
சென்னை : 34.— Vasavi Narayanan (Modi Ka Pariwar) (@VasaviNarayanan) October 6, 2023
Forwarded as received
///*தயவு செய்து இப்பதிவை உங்கள் குரூப்பில் போடவும்.* *அனுப்புநர்:
P.S.கனகராஜ்.
(தலைவர்)
தமிழ்நாடு நீர்நிலைகள் மற்றும் கோயில் நிலங்கள் பாதுகாப்பு சங்கம்.பெறுநர்:
ஆணையாளர் அவர்கள்.
இந்து சமய அறநிலையத்துறை.
நுங்கம்பாக்கம்.
சென்னை : 34.
ஐயா;# *
— SRIDHAR C R(Modi’s Family) (@sriip48) October 8, 2023
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த 2021 இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைத்ததும், கோவில் நகைகளை பணமாக்குவது தொடர்பான திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.
Deccan herald இது தொடர்பாக “தமிழக கோவில்களில் வழங்கப்படும் தங்க ஆபரணங்களை பணமாக்குவதற்கான திட்டத்தை மு.க.ஸ்டாலின் மீண்டும் தொடங்கினார்” என்ற தலைப்பில் கடந்த 2021 அக்டோபர் 13 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு பக்தர்கள் வழங்கும் சிறிய தங்க ஆபரணங்களை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றுவதன் மூலம் பணமாக்கப்படும். தங்க கட்டிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும், அதன் மூலம் கோயிலுக்கு வட்டி வடிவில் வருமானம் கிடைக்கும்.
இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (2021 அக்டோபர் 13 அன்று ) மீண்டும் தொடங்கி வைத்தார். சென்னை திருவேற்காடு, திருச்சிராப்பள்ளியில் சமயபுரம், விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஆகிய 3 கோவில்களில் சிறிய தங்க ஆபரணங்கள் மூலம் பணமாக்கும் திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் பரவி வரும் செய்திகளில் உள்ளவாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக எதுவும் வழக்கு தொடரப்பட்டிருந்ததா என்பது குறித்தும் ஆய்வு செய்து பார்த்தோம். இது தொடர்பாக New Indian Express கடந்த 2021 அக்டோபர் 13 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், “கோயில் தங்கத்தை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்யும் இந்து சமய அறநிலையத் துறையின் (HR&CE) நடவடிக்கைக்கு எதிராகக் குரல் எழுப்பியதை அடுத்து, இதுபோன்ற தங்க பணமாக்குதல் திட்டம் சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை (2021 அக்டோபர் 12 அன்று) தெரிவித்தது.
1977-ம் ஆண்டு முதல் தங்கம் பணமாக்குதல் திட்டம் உள்ளது என்பதை அறியாமல் சிலர் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதுவரை சுமார் 500 கிலோ தங்கம் கட்டிகளாக உருக்கப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.11 கோடி வட்டியை அரசு பெற்றுள்ளது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் கடந்த 2021 இல் “500 கிலோ தங்கம் கட்டிகளாக உருக்கப்பட்டு இதுவரை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்ததை, 500 டன் தங்கம் என்று சிலர் சமூக ஊடகங்களிலும், வாட்சாப்களிலும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் எம்.சரவணன் மற்றும் ஏ.வி.கோபால கிருஷ்ணன் ஆகியோரால் தமிழ்நாடு அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் மீது சென்னை உயர்நீதிநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததோடு, தங்கநகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் இந்த திட்டம் தொடர்பாக, மாநிலத்தை மூன்று மண்டலங்களாகப் பிரித்து இந்த முழு செயல்முறையும் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற இரண்டு நீதிபதிகளும் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படவேண்டும் என்றும் கூறி தீர்ப்பு வழங்கியது.
அதன்படி தமிழ்நாடு அரசு, மாநிலத்தை சென்னை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி என மூன்று மண்டலங்களாகப் பிரித்து, தங்கத்தை பணமாக்குதல் திட்டத்திற்கு கோவில்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சிறிய ஆபரணங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். பெரிய ஆபரணங்கள் அந்தந்த கோவில்களின் வசமே தொடர்ந்து இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து அறிக்கை ஒன்றையும் சமர்பித்துள்ளது. மேலும் இந்த திட்டம் மூலம் வட்டி வடிவில் கிடைக்கும் வருமானம் கோவில்களுக்கே வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இந்து சமய அறநிலையத்துறை குறித்துப் பரப்பப்பட்ட போலி செய்திகளின் தொகுப்பு !
இதற்கு முன்பும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை குறித்து பல செய்திகள் தவறாகப் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் பௌத்த மதச்சின்னம் கொண்டு வந்ததாகப் பரப்பப்படும் பொய் !
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாடு அரசு இதுவரை 500 டன் தங்க நகைகளை உருக்கியுள்ளது எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.