அமைச்சர் உதயநிதி கொடுத்த அரசு பொங்கல் தொகுப்பில் கட்சி சின்னம் என சீமான் பேசிய தவறான தகவல் !
![](https://youturn.in/wp-content/uploads/2024/01/seeman-about-udhayanithi-fact-check.jpg)
பரவிய செய்தி
நீங்கள் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குறீர்கள், சேப்பாக்கத்தில் தம்பி உதயநிதி வேட்டி, சேலை கொடுத்துள்ளார், அதில் எதற்கு உங்கள் படம், உங்கள் அப்பா படம், தாத்தா படம் மற்றும் சின்னம் எல்லாம் இருக்கிறது ? இது யாரு காசு ? – சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1000ரூ ரொக்கப்பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொகுப்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(13வது நிமிடம்), அரசு அளிக்கும் பொங்கல் தொகுப்பில் திமுக கட்சி சின்னம், கலைஞர், ஸ்டாலின், உதயநிதி புகைப்படம் எல்லாம் ஏன் இடம்பெற்று இருக்கிறது எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், ஜனவரி 10ம் தேதி(இன்று) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பொங்கல் தொகுப்பில் கட்சி சின்னமோ, கலைஞர் கருணாநிதியின் புகைப்படமோ, அமைச்சர் உதயநிதியின் புகைப்படமோ இடம்பெறவில்லை. அதில் பொதுவாக, “இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என்றும், முதல்வர் ஸ்டாலினின் புகைப்படம் மட்டும் இடம்பெற்று இருப்பதை காண முடிந்தது.
இல்லங்களில் இன்பம் பொங்கிடும் தமிழர் திருநாளின் மகிழ்ச்சியைக் கூட்டிடும் #பொங்கல்_பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தேன்.
சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்! pic.twitter.com/vbkVS6GWRV
— M.K.Stalin (@mkstalin) January 10, 2024
இதே போன்று பொங்கல் தொகுப்பு வழங்கியது குறித்து அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவு செய்துள்ள புகைப்படத்திலும், பொங்கல் தொகுப்பு வழங்கும் மஞ்சள் பைகளில் தமிழ்நாடு அரசின் முத்திரை மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டு மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ரூ.1000 நிதி மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பை அறிவித்தார்கள். அதன்படி, நம் #ChepaukTriplicane தொகுதி, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகேயுள்ள #TUCS நியாய விலைக் கடையில் ரூ.1000 பொங்கல்… pic.twitter.com/Ex7XEjz2QL
— Udhay (@Udhaystalin) January 10, 2024
ஜனவரி 9ம் தேதி அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள மற்றொரு பதிவில், பொங்கல் தொகுப்புகள் வழங்கியுள்ள பைகளில், கட்சியின் சின்னம், உதயநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரோடு சேர்த்து, சில கட்சி நிர்வாகிகளின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.
நம்முடைய #ChepaukTriplicane தொகுதி மக்களுக்கு தைப்பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி வருவதன் தொடர்ச்சியாக இன்று, திருவல்லிக்கேணி பகுதி, 120ஆவது வட்டக் கழகத்திற்கு உட்பட்ட சுதந்திரா நகரில் வசிக்கும் 1000 பேருக்கு பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி, வெல்லம் உள்ளிட்ட தொகுப்புகளோடு,… pic.twitter.com/QKCUxEqLDQ
— Udhay (@Udhaystalin) January 9, 2024
அப்பதிவுகளில், “நம்முடைய சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு தைப்பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி வருவதன் தொடர்ச்சியாக இன்று, திருவல்லிக்கேணி பகுதி, 120-ஆவது வட்டக் கழகத்திற்கு உட்பட்ட சுதந்திரா நகரில் வசிக்கும் 1000 பேருக்கு பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி, வெல்லம் உள்ளிட்ட தொகுப்புகளோடு, புத்தாடைகளையும் இன்று வழங்கினோம். அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து, அவர்களின் வாழ்த்துகளையும் பெற்றோம்.” என்றுள்ளது.
இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் கட்சியின் சார்பில் பொங்கல் தொகுப்புடன் புத்தாடைகளையும் சேர்த்து வழங்கியதை, அரசு சார்பில் வழங்கியது என்று கருதி, சீமான் தவறான தகவலைப் பேசி உள்ளார்.
மேலும் படிக்க: பொங்கல் பரிசு தொகை டாஸ்மாக் செல்வதாக பழைய புகைப்படத்தினை செய்தியாக வெளியிட்ட தினமலர் !
மேலும் படிக்க: முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டினருக்கு பொங்கல் தொகுப்பு கொடுத்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !
முடிவு :
நம் தேடலில், அமைச்சர் உதயநிதி கொடுத்த தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பில் திமுக கட்சியின் சின்னம் மற்றும் கட்சி நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பதாக சீமான் கூறிய தகவல் தவறானவை என்பதை அறிய முடிகிறது.