தமிழ்நாட்டிற்கு ஜி.எஸ்.டி நிலுவை தொகை முழுமையாக கொடுத்து விட்டதாக அண்ணாமலை கூறிய பொய் !

பரவிய செய்தி
ஜிஎஸ்டி நிலுவை தொகை 16 ஆயிரம் கோடியை மத்திய அரசு தரவில்லை என தமிழக நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால், தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், உணமையை மறைத்து தமிழக அரசு பொய் கூறுகின்றது.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டிற்கு ஜி.எஸ்.டி நிலுவை தொகையாக 16 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு தரவில்லை என தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் கூறுகிறார், தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டு விட்டது, ஆனால் தமிழக அரசு பொய் கூறுகிறது என தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.
உண்மை என்ன ?
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ” தற்போதைய நிதியாண்டிற்கான இழப்பீடு தொகை உட்பட மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ரூ.16,725 கோடி ஜி.எஸ்.டி தொகையை வழங்க வேண்டும் என 2021 டிசம்பர் 31-ம் தேதி வெளியான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
மார்ச் 18-ம் தேதி தமிழக பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த போது, ” ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையால் இந்த ஆண்டில் 20 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என ” தெரிவித்து இருந்தார்.
இதுமட்டுமின்றி, மார்ச் 15-ம் தேதி திமுக எம்பி வில்சன் ராஜ்ய சபாவில், ” ஒன்றிய அரசு 38 தலைப்புகளின் கீழ் ரூ.20,287 கோடி நிலுவை தொகையை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டி உள்ளது. அதில், ஜி.எஸ்.டி நிலுவை தொகை மட்டும் ரூ.9,842.58 கோடி ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
மார்ச் 16-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்ய சபாவில், ” மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) இழப்பீடாக ரூ.96,756 கோடி வழங்கப்பட்டு உள்ளதாகவும், இன்னும் ரூ.53,161 கோடி நிலுவையில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டிற்கு ரூ. 6,733 கோடி நிலுவையில் இருப்பதாகவும் ” தெரிவித்து இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி உட்பட நிலுவை தொகை அனைத்தும் ஒன்றிய அரசு தரப்பில் கொடுக்கப்பட்டு விட்டதாக அண்ணாமலை கூறியது தவறான தகவல் என அறிய முடிகிறது.