ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி தராவிட்டால் பாஜக சார்பில் நிர்வாணப் போராட்டமா ?.. பரவும் போலிச் செய்தி !
பரவிய செய்தி
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி தராவிட்டால், அகோரி மணிகண்டனை அழைத்து எனது தலைமையில் வடகோவை பாலத்தின் மேல் பாஜகவினர் அனைவரும் நிர்வாண போராட்டம் நடத்துவோம் – பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா
மதிப்பீடு
விளக்கம்
அக்டோபர் 2-ம் தேதி தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்து வந்தன. இதை எதிர்த்து, சமுத்துவ மனித சங்கிலி ஊர்வலம் நடத்தப்படும் என எம்.பி திருமாவளவன் அறிவித்து இருந்தார்.
எனினும், பாதுகாப்பு காரணமாக தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ம் தேதி எந்தவொரு ஊர்வலத்திற்கும், பேரணிக்கும் அனுமதி இல்லை என தமிழ்நாடு காவல்துறை தரப்பில் அறிவிக்கப்ப்பட்டது. இதற்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எப்படியாவது ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்துவோம் என வலதுசாரிகள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையில், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி தராவிட்டால் பாஜக சார்பில் நிர்வாணப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக கதிர் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அக்கட்சியின் மகளிர் அணியை தவறாகக் குறிப்பிட்டும் இந்த கார்டு வைரல் செய்யப்படுகிறது.
உண்மை என்ன ?
இந்த செய்திக்கு கதிர் நியூஸ் பக்கம் எஸ்.ஜி.சூர்யாவை விமர்சிக்கும் வகையில் படத்தை வைத்து வெளியிட்டு இருப்பதாக வைரல் பதிவுகளில் தெரிவித்து உள்ளதை பார்க்க முடிந்தது. ஆனால், கதிர் நியூஸ் பக்கத்தை நடத்துவதே பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா தான்.
வைரல் செய்யப்படும் கார்டு குறித்து கதிர் நியூஸ் பக்கத்தில் தேடுகையில், செப்டம்பர் 29ம் தேதி அப்படி எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. அது போலியாக எடிட் செய்யப்பட்டது. இது பொய் பரப்புரை என கதிர் நியூஸ் தெரிவித்து உள்ளது.
கதிர் நியூஸ் பக்கத்தின் நியூஸ் கார்டில் பாஜகவிற்கு எதிராக போலியான செய்தியை எடிட் செய்து சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : பி.எஃப்.ஐ அமைப்பை தடை செய்ததால் இந்திய ரூபாய் மதிப்பு உயரும் என ஜே.பி.நட்டா கூறினாரா ?
இதற்கு முன்பாக, பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பி.எஃப்.ஐ அமைப்பைத் தடை செய்துவிட்டதால் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு இணையாக உயரும் எனக் கூறியதாகப் போலியான நியூஸ் கார்டு பரப்பப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி தராவிட்டால் பாஜகவினர் அனைவரும் நிர்வாணப் போராட்டம் நடத்துவோம் என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.