பாகிஸ்தானில் சித்திரவதை செய்யப்படும் இந்துப்பெண் என தவறாகப் பரவும் வீடியோ !
பரவிய செய்தி
இர்பான் பதான் அவர்களே பாகிஸ்தானில் இந்துப் பெண்களின் நிலையைப் பாருங்கள்.. இதைப் பற்றி பேச உங்களுக்கு தகுதி உள்ளதா ?? அல்லது டூல்கிட் கும்பல் மூலம் அதிக பணம் செலுத்தப்பட்டால் மட்டும் பதிவிடுவீர்களா? உங்களுக்கு பெயரும் புகழும் கொடுத்த நாட்டிற்கு எதிராகச் செல்ல வெட்கம் இல்லையா?
மதிப்பீடு
விளக்கம்
பாகிஸ்தானில் இந்துப்பெண் தாக்கப்படுவதாகக் கூறி 1:21 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் இந்திய அளவில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோ, வயதானப்பெண் ஒருவரை தலைமுடியைப் பிடித்து ஒருவர் இழுத்து சென்று கொடூரமாக தாக்குவதைப் போன்றும், பின்னர் அவரோடு சேர்ந்து சில பெண்களும் தொடர்ந்து அந்தப்பெண்ணைத் தாக்குவது போன்றும் அமைந்துள்ளது.
Hey @IrfanPathan Please see this Condition of #Hindu women in #Pakistan
Do you have the ba££s to speak on this?? Or you will just post only when you paid handsomely by Toolkit gang? Don’t have the shame to go against the Country who gave you Name, Fame?#StopTheViolence… pic.twitter.com/GRCF6hgSvi
— Sunny 😎 (@being_sunny1) November 3, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவில் இருப்பவர் இந்துப்பெண் அல்ல என்பதையும், அந்த வயதான பெண்மணியின் பெயர் ‘முனாவர் கன்வாவல்‘ என்பதையும் அறிய முடிகிறது.
கடந்த 2022 ஜனவரி 09 அன்று பாகிஸ்தானிய ஊடகமான ஜியோ நியூஸ் இந்த சம்பவம் குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நிலத் தகராறின் காரணமாக அந்த வயதான மூதாட்டி 13 வருடங்களுக்கும் மேலாக இந்த சித்தரவதையை அனுபவித்துள்ளார். இந்த வீடியோ கடந்த 2022 ஜனவரி 09 அன்று வைரலான பிறகே, சியால்கோட் போலீஸார் நடவடிக்கை எடுத்து சந்தேகத்தின் பேரில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, நான்கு பெண்கள் உட்பட ஒன்பது பேரை கைது செய்துள்ளனர்.” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இதே போன்று dawn ஊடகமும் கடந்த 2022 ஜனவரி 1௦ அன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் மாவட்டத்தின் பலுரா கலன் கிராமத்தில் நிலத் தகராறில் பெண்ணை சித்திரவதை செய்ததாக 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களில் 9 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
முதலில் நசீரின் என்ற பெண் தனது உறவினர்களுடன் சேர்ந்து முனாவர் கன்வாலை கடுமையாக சித்திரவதை செய்துள்ளார். அவரது உறவினர் ஒருவர் முனாவரின் தலைமுடியைப் பிடித்து கிராமத்திற்குள் இழுத்துச் சென்றார். பின்னர் பெண்கள் உட்பட சிலர் முனாவரை சரமாரியாக அடித்தும், உதைத்தும், இரும்பு கம்பியால் தாக்கியும் உள்ளனர்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
سیالکوٹ پولیس نے بزرگ خاتون پر تشدد کرنے والے ملزمان 4 خواتین اور 1 مرد کو گرفتار کر لیا ہے ، باقی ملزمان کو بھی جلد گرفتار کر لیا جائے گا۔@DpoSialkot https://t.co/xoY2kDPdS0 pic.twitter.com/JQgGk1gTon
— Punjab Police Official (@OfficialDPRPP) January 9, 2022
இச்சம்பவம் குறித்தும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்தும் பாகிஸ்தானின் பஞ்சாப் போலீஸ் எக்ஸ் பக்கத்தில் கடந்த 2022 ஜனவரி 9ம் தேதி பதிவிட்டு உள்ளனர்.
மேலும் படிக்க: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மக்கள் இந்தியா உடன் இணைய சபதம் எடுப்பதாகப் பரவும் தவறான தகவல் !
மேலும் படிக்க: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தனது சகோதரியை திருமணம் செய்ததாகப் பரவும் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், பாகிஸ்தானில் ஒரு இந்துப்பெண் கொடூரமாக தாக்கப்படுகிறார் என்றுக் கூறி பரவி வரும் வீடியோ தவறானவை என்பதையும், நிலத்தகராறின் காரணமாகவே அந்த வயதான முஸ்லீம் பெண் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார் என்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது.