சிறுவர்கள் மூலம் தண்டவாளத்தில் கற்களை அடுக்கி இரயிலை கவிழ்க்க சதி எனப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி

இது மாதிரி இந்தியாவில் மட்டுமே நடக்கும்.. தேச துரோகிகள்.Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஒடிசாவில் கடந்த 2ம் தேதி மிகப்பெரிய இரயில் விபத்து நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து இரயில் தண்டவாளத்தில் நீண்ட தூரத்திற்குக் கற்களை அடுக்கி வைத்திருந்த சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Archive link 

அதில், ரயில்வே பணியாளர்கள் அந்த சிறுவனிடம் தண்டவாளத்தின் மீது வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றச் சொல்லிக் கூறுகின்றனர். மேலும் காவல்துறையிடம் அழைத்துச் செல்வதாக அப்பணியாளர்கள் கூறுகையில், வேண்டாம் எனக் காலில் விழுந்து அழுகிறான்.

கர்நாடகாவில் இரயிலைத் தடம் புரட்ட யாரோ ஒருவரால் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் இவ்வீடியோ பரப்பப்பட்டு வருகின்றது.

உண்மை என்ன ? 

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், அது சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.

அந்த வீடியோவை 2018ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி ‘பார்கவி பாபு ஒரு இந்து’ (மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது) என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இப்படித்தான் ரயில்கள் தடம் புரண்டு, மக்கள் இறக்கிறார்கள். நாம் ரயில்வே மற்றும் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பரவக் கூடிய வீடியோவில் அச்சிறுவன் தேவநகர் எனக் கூறும் பகுதி கர்நாடகாவில் உள்ளது. அப்பகுதிக்கு அருகில் கலபுர்கி என்ற இரயில் நிலையம் அமைந்துள்ளது. தேவநகருக்கும் கலபுர்கிக்கும் 3.3 கி.மீ. தூரம் இடைவெளி எனக் கூகுள் மேப் மூலம் அறிய முடிந்தது. வைரலாகக்கூடிய வீடியோ கலபுர்கி ரயில் நிலையத்திற்கு அருகில் எங்காவது நடந்திருக்க வேண்டும்.

இது தொடர்பாக யூடர்னில் இருந்து கலபுர்கி ரயில் நிலைய ரயில்வே இன்ஸ்பெக்டரைத் தொடர்புகொண்டு பேசுகையில், “இந்நிகழ்வு 2017 அல்லது 2018ல் கலபுர்கி மற்றும் வாடி இரயில் நிலையங்களுக்கு  இடைப்பட்ட இரயில் பாதையில் எங்கோ நடந்தது. அச்சிறுவன் விளையாட்டாகக் கற்களைத் தண்டவாளத்தில் வைத்துள்ளான். அவனது தவறை உணர்ந்து அவன் மன்னிப்பு கேட்டதினால், வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இரயில்வே அதிகாரிகள் அவனை மன்னித்து அனுப்பி வைத்தனர். அச்சிறுவன் எந்த உள்நோக்கத்துடனும் அதனைச் செய்யவில்லை. மேலும் அவனுக்குப் பின்னல் எந்த ஒரு தனி நபரோ அல்லது குழுவோ இல்லை” என்றார்.

மேலும் படிக்க : ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு அருகே இருந்த இஸ்கான் கோவிலை மசூதி என வதந்தி பரப்பிய வலதுசாரிகள் !

இதே போன்று ஒடிசா இரயில் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் மசூதி உள்ளது, ரயில் நிலைய அதிகாரி இஸ்லாமியர் என பல்வேறு பொய் செய்திகள் பரப்பப்பட்டன. அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்னில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ஒடிசாவில் விபத்து நடந்த இரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் பெயர் முகமது ஷெரீப் எனப் பரப்பப்படும் வதந்தி !

முடிவு : 

நம் தேடலில், இரயிலைத் தடம்புரள வைக்க பயிற்றுவிக்கப்பட்ட சிறுவன் தண்டவாளத்தில் கல் வைத்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அந்த வீடியோ கடந்த 2018ல் எடுக்கப்பட்டது. அச்சிறுவனுக்குப் பின்னால் எந்த அமைப்போ, தனிநபரோ இல்லை எனக் கர்நாடகா மாநிலம் கலபுர்கி ரயில் நிலைய ரயில்வே இன்ஸ்பெக்டர் யூடர்னிடம் விளக்கம் அளித்துள்ளார்.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader