அரபியில் இருக்கும் “திருச்சி தமிழ்” ரெஸ்டாரண்ட் திருச்சியில் இருக்கிறதா ?| தவறான பதிவு !
பரவிய செய்தி
வடஇந்தியர்கள் அதிகம் வந்து தரிசனம் செய்யும் மதுரை கோயில் வாசலில் இந்தியாவில் அதிகம் பேசப்படும் இந்தியில் எழுதி இருந்ததாக சேட்டுகிட்ட சண்டைக்கு போன ” ஆம்பள ” திருச்சியில் இந்த கடைக்கு போய் ஏன்டா இந்த நாட்டிலேயே இல்லாத அரபு பாஷையில் போர்டு வெச்சேன்னு கேட்பானா ?
மதிப்பீடு
விளக்கம்
” திருச்சி தமிழ் ” ரெஸ்டாரண்ட் என ஆங்கிலம் மற்றும் அரபி மொழியில் பெயர் இடம்பெற்று இருக்கும் உணவு விடுதியின் புகைப்படங்கள் ட்விட்டர் , முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு சிலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
வட இந்தியர்கள் அதிகம் வந்து தரிசனம் செய்யும் மதுரை கோயில் வாசல்ல இந்தியாவில் அதிகம் பேசும் இந்தியில் எழுதி இருந்தாக சேட்டுகிட்ட சண்டைக்குப் போன “ஆம்பள”
திருச்சியில் இந்த கடைக்கு போய் ஏன்டா இந்த நாட்டிலேயே இல்லாத அரபு பாஷையில போர்டு வெச்சேன்னு கேட்பானா???? pic.twitter.com/tA9LaxeMN6— 🚩 MANIKANDAPRABHU NAIDU🚩 (@MANIKAN98585646) October 7, 2019
மதுரையில் இந்தி மொழியில் பெயர் வைத்ததற்கு சண்டைக்கு போனவர்கள், திருச்சியில் உள்ள திருச்சி தமிழ் ரெஸ்டாரண்டில் தமிழ் மொழியை வைக்காமல் இந்தியாவில் இல்லாத அரபி மொழியை வைத்து இருப்பதற்கு கேள்வி கேட்பார்களா என மணிகண்டபிரபு நாயுடு என்ற ட்விட்டர் கணக்கில் அக்டோபர் 6-ம் தேதி பதிவாகி இருக்கிறது.
இந்த பதிவு முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவத் துவங்கியது. இதே ரெஸ்டாரண்ட் புகைப்படத்தை வைத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் பெயர் பலகை என மீம்ஸ் பதிவிட்டு இருக்கிறார்கள்.
” திருச்சி தமிழ் ” ரெஸ்டாரண்ட் :
திருச்சி தமிழ் என பெயர் வைத்த காரணத்தினால் ரெஸ்டாரண்ட் திருச்சி நகரில் இருக்கிறதாக நினைத்துக் கொண்டுள்ளனர். கூகுள் மேப்பில் சென்று ” திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட் ” என தேடுகையில் அபுதாபியில் மதினா சூப்பர் மார்க்கெட் அருகே இருக்கும் இந்த ரெஸ்டாரண்டின் முகவரியை காண்பிக்கிறது. மேலும், உணவு விடுதியின் புகைப்படங்கள் சில இடம்பெற்று இருக்கிறது.
அரபு நாட்டில் உணவகம் வைத்திருக்கும் ஒருவர் திருச்சி நகரம் மற்றும் தமிழ் மொழியையும் இணைத்து ” திருச்சி தமிழ் ” என்ற பெயரில் உணவகத்திற்கு பெயர் வைத்து இருக்கிறார். அரபு தேசம் என்பதால் அரபி மற்றும் ஆங்கிலத்தில் பெயர் பலகையை வைத்துள்ளார்.
இதையறியாமல், வதந்தியின் மூலம் வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் மீம்கள் மற்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.