திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவராக நாக பாபு தலைவராக நியமனம் செய்யப்பட்டாரா?
பரவிய செய்தி
பவன் கல்யாண் சகோதரர் நாகேந்திர பாபு திருப்பதி தேவஸ்தானம் தலைவர் ஆனார். (இதற்கு முந்தைய தலைவர் கிறித்துவர் நீக்கம்). தமிழகத்திலும் இது போன்ற சம்பவம் இரண்டு ஆண்டு கழித்து நடக்கும்…..
மதிப்பீடு
விளக்கம்
கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர பிரதேச சட்டமன்ற தேர்தலும் நடந்து முடிந்தது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அம்மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு கடந்த 12ம் தேதி பதவியேற்றார். அதுமட்டுமின்றி அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளில் 16 இடங்களை தெலுங்கு தேசம் கட்சி கைப்பற்றியது.
ஆந்தியாவில் உள்ள ஜனசேனா கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு முக்கிய அங்கம் வகித்தது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாணுக்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது சகோதரர் நாகபாபு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய தகவல் குறித்து இணையத்தில் தேடியதில் தேடியதில், TTD (Tirumala Tirupati Devasthanams) தலைவராக யாரும் புதியதாக நியமிக்கப்படவில்லை என்பதை அறியமுடிந்தது.
இச்சம்பவம் குறித்து நாக பாபுவின் அதிகாரப்பூர்வ பக்கங்களை ஆய்வு செய்தோம். ஜூன் 6ஆம் தேதியன்று அவரது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அதில், பொய் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கட்சி மற்றும் தன்னுடைய அதிகாரப் பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகும் செய்திகளை மட்டும் நம்புங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
Do not believe any fake news. Trust only information from official party handles or my verified social media accounts. Please do not trust or spread fake news.
— Naga Babu Konidela (@NagaBabuOffl) June 6, 2024
மேற்கொண்டு இது தொடர்பாக ’TV9 telugu’ ஊடகத்திற்கு நாக பாபு அளித்த பேட்டி கடந்த 6ம் தேதி அவர்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதிலும் பரவக் கூடிய தகவல் பொய்யானது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
అది ఫేక్ న్యూస్.. TTD Chairman Post పై Naga Babu రియాక్షన్ – TV9#nagababu #ttd #TV9Telugu pic.twitter.com/2V3g3ByUX9
— TV9 Telugu (@TV9Telugu) June 6, 2024
இவற்றிலிருந்து, ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணின் சகோதரர் நாக பாபு திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தி உண்மை அல்ல என்றும் அறிய முடிகிறது.
மேலும், ஆந்திர மாநிலத்தில் நடந்த தேர்தலில் YSRCP தோல்வி அடைந்ததை அடுத்து TTD தலைவர் பதவியை பூமனா கருணாகர் ரெட்டி ராஜினாமா செய்தார் என ’The Times Of India’ இணையத்தளத்தில் ஜூன் 4ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவர் கிறிஸ்தவர் என்றும் நாத்திகர் என்றும் 2023ல் இருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இதனை அப்போதே அவர் மறுத்துள்ளார்.
முடிவு :
நம் தேடலில், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவராக நாக பாபு நியமிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது.