திமுகவுடன் இணைய டிடிவி தினகரன் முடிவு என அதிமுகவினர் பரப்பும் 2019ல் வெளியான கிளிக் பைட் செய்தி !

பரவிய செய்தி

திமுகவுடன் இணைய முடிவு !! டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு

X post link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மிக்ஜாம் புயலால் பெய்த அதீத கனமழை காரணமாக சென்னை வெள்ளத்தில் சிக்கி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழை பாதிப்பு உள்ள இடங்களிலும் தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், டிசம்பர் 5ம் தேதி சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மழை நீரை வெளியேற்றும் பணியில் அரசு சிறப்பாக செயல்படுவதாகக் கூறி இருந்தார்.

இந்நிலையில், “திமுக உடன் இணைய முடிவு, டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு ” எனும் தலைப்பில் ஏசியா நெட் தமிழ் வெளியிட்ட பதிவை வைத்து, இதனால் தான் திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது எனக் கூறியதாக அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ? 

அதிமுகவினர் பரப்பும் செய்தி குறித்து தேடுகையில், அந்த செய்தி கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி ஏசியா நெட் தமிழ் எக்ஸ் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது . ஆனால், செய்தியின் தலைப்பில், ” திமுக கோர்ட்டுக்கு போனால் நாங்களும் போவோம்… டி.டி.வி.தினகரன் அதிரடி முடிவு..! ” என்றே உள்ளது.

X post link | Archive link 

செய்தியின் உள்ளே, உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக உச்ச நீதிமன்றத்திற்கு போனால், அமமுகவும் கோர்ட்டை நாடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக தெரிவித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டங்களாக தேர்தலை நடத்தி ஆளும் கட்சி(அதிமுக) பதவி அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் உள்ளதாக அனைத்து கட்சிகளும் தெரிவிக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்திற்கு சென்றால் அமமுகவும் நீதிமன்றத்தை நாடும் எனத் தெரிவித்து இருந்தார்.

ஆனால், கிளிக் பைட் செய்திக்காக திமுகவுடன் இணைய டிடிவி தினகரன் முடிவு என்ற தலைப்பை ஏசியாநெட் செய்தி வைத்துள்ளது. கடந்த 2019ல் வெளியான செய்தியை தற்போது அதிமுகவினர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

Facebook link 

மேலும், ” கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தினை நடத்த அவசரம் காட்டும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது ” என டிசம்பர் 7ம் தேதி டிடிவி தினகரன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க : சென்னையில் 2023ம் ஆண்டை விட 2015ல் இரண்டு மடங்கு அதிக மழை பெய்ததாக அதிமுகவினர் பரப்பும் தவறான தகவல் !

முடிவு : 
நம் தேடலில், திமுகவுடன் இணைய டி.டி.வி.தினகரன் முடிவு என அதிமுகவினர் பரப்பும் செய்தி தவறானது என்பதையும், அது 2019ல் உள்ளாட்சி தேர்தல் வழக்கு குறித்து தினகரன் கூறியதை கிளிக் பைட் செய்தியாக வெளியிட்டு இருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.
Please complete the required fields.




Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader