திமுகவுடன் இணைய டிடிவி தினகரன் முடிவு என அதிமுகவினர் பரப்பும் 2019ல் வெளியான கிளிக் பைட் செய்தி !
பரவிய செய்தி
திமுகவுடன் இணைய முடிவு !! டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு
மதிப்பீடு
விளக்கம்
மிக்ஜாம் புயலால் பெய்த அதீத கனமழை காரணமாக சென்னை வெள்ளத்தில் சிக்கி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழை பாதிப்பு உள்ள இடங்களிலும் தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், டிசம்பர் 5ம் தேதி சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மழை நீரை வெளியேற்றும் பணியில் அரசு சிறப்பாக செயல்படுவதாகக் கூறி இருந்தார்.
இந்நிலையில், “திமுக உடன் இணைய முடிவு, டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு ” எனும் தலைப்பில் ஏசியா நெட் தமிழ் வெளியிட்ட பதிவை வைத்து, இதனால் தான் திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது எனக் கூறியதாக அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
லண்டன் ஹோட்டல் வழக்கை சொத்து வழக்கிலிருந்து பிரித்துவிட்டால் சொத்து வழக்கை விரைவில் முடிக்கலாம் என்கிற யோசனனையை கருணாநிதிக்கு கொடுத்ததே இந்த தினகரன் தான் , அதை வழக்கறிஞர் ஜோதி செல்வி ஜெ விடம் போட்டுக்கொடுத்தார்னு தான் அவரை ஓரம்கட்டினாங்க , தினகரன் தி மு க வை கடுமையாக சாடி நான்… https://t.co/4zYwMv0L2J
— kishore k swamy (@sansbarrier) December 9, 2023
ஐயா எடப்பாடியார்,டிடிவி யை கட்சியை விட்டு நீக்கியது ஏன் என்று அமமுக தொண்டர்களுக்கு இப்ப புரியும்…புரட்சித்தமிழரின் தொலைநோக்கு பார்வைக்கு தலை வணங்குகிறேன்
தாய் கழகம் அன்புடன் அழைக்கிறது மனம் திரும்பி வாரீர் ✌@EPSTamilNadu @satyenaiadmk @ADMKTenkasi https://t.co/7YWhnizH79— Joel_durai (@Joel_durai08) December 9, 2023
உண்மை என்ன ?
அதிமுகவினர் பரப்பும் செய்தி குறித்து தேடுகையில், அந்த செய்தி கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி ஏசியா நெட் தமிழ் எக்ஸ் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது . ஆனால், செய்தியின் தலைப்பில், ” திமுக கோர்ட்டுக்கு போனால் நாங்களும் போவோம்… டி.டி.வி.தினகரன் அதிரடி முடிவு..! ” என்றே உள்ளது.
திமுகவுடன் இணைய முடிவு !! டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு !!#TTVDhinakaran #stalin #DMK #Politics #TamilNadu https://t.co/9hxLDVIiob
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 9, 2019
செய்தியின் உள்ளே, உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக உச்ச நீதிமன்றத்திற்கு போனால், அமமுகவும் கோர்ட்டை நாடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக தெரிவித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டங்களாக தேர்தலை நடத்தி ஆளும் கட்சி(அதிமுக) பதவி அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் உள்ளதாக அனைத்து கட்சிகளும் தெரிவிக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்திற்கு சென்றால் அமமுகவும் நீதிமன்றத்தை நாடும் எனத் தெரிவித்து இருந்தார்.
ஆனால், கிளிக் பைட் செய்திக்காக திமுகவுடன் இணைய டிடிவி தினகரன் முடிவு என்ற தலைப்பை ஏசியாநெட் செய்தி வைத்துள்ளது. கடந்த 2019ல் வெளியான செய்தியை தற்போது அதிமுகவினர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும், ” கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தினை நடத்த அவசரம் காட்டும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது ” என டிசம்பர் 7ம் தேதி டிடிவி தினகரன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க : சென்னையில் 2023ம் ஆண்டை விட 2015ல் இரண்டு மடங்கு அதிக மழை பெய்ததாக அதிமுகவினர் பரப்பும் தவறான தகவல் !