கனிமொழியை பிரச்சாரம் செய்யவிடாமல் விரட்டிய மக்கள் என 2019 இன் வீடியோவைப் பரப்பும் பாஜகவினர்!
பரவிய செய்தி
இது எங்கே?.. எப்போ நடந்தது?.. பிரச்சாரத்தில் கெட்ட வார்த்தை பேசி துரத்தி அடிக்கப்பட்ட கனிமொழி.. தூத்துக்குடியில் பரபரப்பு..
மதிப்பீடு
விளக்கம்
2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திமுக, பாஜக, அதிமுக மற்றும் இதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற எம்பி கனிமொழியை மக்கள் விரட்டியதாகக் கூறி 2:21 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் தேர்தல் பிரச்சார வண்டியில் அமர்ந்துள்ள கனிமொழியுடன், மக்கள் பலரும் கூட்டமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.
பொய்மொழி ஆண்ட்டி கதறவிடப்பட்டார்…
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை விரட்டி அடித்த பொதுமக்கள். இன்று கனிமொழியை ஆபாசமாக திட்டி பிரச்சாரம் செய்யவிடாம விரட்டி அடிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் திமுக வேட்பாளர்களுக்கு இதே நிலை.. திருடர்கள் முன்னேற்றகழகம் என்று… pic.twitter.com/M5u1iHP68q
— Johny Bhai(மோடியின் குடும்பம்) (@Johni_raja) April 3, 2024
இது எங்கே?
எப்போ நடந்தது?
பிரச்சாரத்தில் கெட்ட வார்த்தை பேசி துரத்தி அடிக்கப்பட்ட கனிமொழி !தூத்துக்குடியில் பரபரப்பு ! pic.twitter.com/zP6KcA45Ch
— Sankar Ndt (@sankar_ndt) April 3, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதையும், கடந்த 2019 லேயே இந்த வீடியோ வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிந்தது.
பண்ருட்டி ஜோதி என்பவரது ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஏப்ரல் 13 அன்று பரவி வரும் இதே வீடியோ, “மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கனிமொழி.. கனிமொழியை பிரச்சாரம் செய்யவிடாமல் திருப்பி அனுப்பிய மக்கள்..” என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோவில், சிலர் குறிப்பிட்ட சாதி பெயர்களைக் குறிப்பிட்டு கனிமொழியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், கனிமொழி நான் அவ்வாறு பேச வில்லை என்று கூறுவதையும் தெளிவாகக் கேட்க முடிகிறது.
இதன் மூலம் 2019 லிருந்து சமூக ஊடகங்களில் பரவி வரும் பழைய வீடியோவை தற்போது எடுக்கப்பட்டது என்று கூறி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: தூத்துக்குடியில் கனிமொழியை மக்கள் விரட்டியதாகப் பரவும் தவறான தகவல்!
இதற்கு முன்பும் எம்பி கனிமொழியை தூத்துக்குடி மக்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி செய்திகள் தவறாகப் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
முடிவு:
நம் தேடலில், கனிமொழியை தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் மக்கள் விரட்டியதாகக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.